டெல்லி: டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலமாக டெல்லியில் தரையிறங்கியுள்ளனர். பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக இந்திய அணி வீரர்களின் வருகை தாமதமான நிலையில், நேற்று பிசிசிஐ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானம் மூலமாக இந்திய வீரர்கள், பிசிசிஐ நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியால் இந்திய அணி வீரர்கள் பலரும் மைதானத்திலேயே ஆனந்த் கண்ணீருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் 10 ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் சொதப்பி வந்ததால் சோகத்தில் இருந்த இந்திய ரசிகர்கள், இந்த வெற்றியை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். இந்திய அணி ஜூலை 1ஆம் தேதியே இந்தியா வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சூழலில், பார்படாஸில் திடீரென புயல் வந்தது. இதனால் பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் 2 நாட்களாக பார்படாஸில் உள்ள ஹோட்டலிலேயே இந்திய வீரர்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை பிசிசிஐ சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானம் பார்படாஸ் விமான நிலையம் சென்றது. அதன்பின் இந்திய வீரர்கள், பிசிசிஐ நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரும் விமான பயணத்தை தொடங்கினர்.
தொடர்ந்து 16 மணி நேரத்திற்கு பின் இந்திய அணி வீரர்கள் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தனர். இதனிடையே இந்திய வீரர்களை வரவேற்க காலை 5.30 மணியளவிலேயே ரசிகர்கள் பலரும் விமான நிலையத்தில் குவிய தொடங்கினர். 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பை இந்திய மண்ணிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இந்திய வீரர்கள் வாழ்த்து பெறுகின்றனர். அங்கிருந்து மும்பை வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மாலை 5 அணிக்கு திறந்தவெளி பேருந்தில் வெற்றிப் பேரணியில் ஈடுபடவுள்ளனர். இதற்காக ஏற்கனவே கேப்டன் ரோகித் சர்மா ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பின்னர் வான்கடே மைதானத்திற்கு சுமார் 45 நிமிடங்கள் நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது இந்திய அணிக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.