
அதிரடி ஆரம்பம்
முதல் இன்னிங்ஸிலேயே அதிகளவில் பனிப்பொழிவு இருந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்தில் - டேர்லி மிட்செல் ஆகியோர் அதிரடி காட்டினர். அவர்களின் அதிரடியால் 4 ஓவர்களில் அந்த அணி 48 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய கப்தில் மற்றும் மிட்செல் ஆகியோர் தலா 31 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அசத்திய ஸ்பின்னர்கள்
ஆனால் அதிவேகமாக உயர்ந்த நியூசிலாந்து ரன்ரேட்டை இந்திய அணியின் அஸ்வின் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் குறைத்தனர். ஸ்பின்னர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் ஒட்டுமொத்தமாக சரிந்தது. இதனால் 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 4 ஓவர்களில் அஸ்வின் 19 ரன்களும் அக்ஷர் பட்டேல் 26 ரன்களும் மட்டுமே விட்டுக்கொடுத்து தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இந்த போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்தார்.

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்தனர் ரோகித் சர்மா- கே.எல்.ராகுல் ஜோடி. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 117 ரன்களை சேர்ந்தனர். இதன் மூலம் இவர்கள் தொடர்ச்சியாக 5வது முறையாக 50+ பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 49 பந்துகளில் 65 ரன்களை சேர்த்தார்.

ரோகித்தின் அதிரடி
இதன் பிறகு தனது பங்கிற்கு அதிரடியை தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா 55 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்த போது, சூர்யகுமார் யாதவ் 1 ரன்னுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் மீண்டும் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இறுதியில் ரிஷப் பண்ட் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டதால் 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 - 0 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. ரோகித் சர்மா கேப்டன்சியில், டிராவிட் பயிற்சியில் இந்தியா தனது முதல் தொடரிலேயே வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications