15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா!
ராய்பூர்: நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் ராய்ப்பூர் பிட்ச் இந்திய அணி பவுலர்களுக்கு பெரும் ட்விஸ்ட்டை கொடுத்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது. எனவே தொடரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ள 2வது ஒருநாள் போட்டி ராய்பூரில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடரை கைப்பற்ற இந்திய அணியும், பதிலடி கொடுப்பதற்காக நியூசிலாந்து அணியும் முனைப்பு காட்டின.

நீடிக்கும் குழப்பம்
ராய்பூரில் உள்ள சாஹீத் வீர் நாராயன் சிங் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடைபெற்று வரும் சூழலில் முதல்முறையாக சர்வதேச போட்டி நடைபெறுகிறது. எனவே இந்த களம் எப்படி இருக்கும் என்ற குழப்பம் இரு அணிகளுக்குமே இருந்தது. இங்கு பேட்டிங், பவுலிங் என இரண்டிற்குமே சம அளவில் உதவி இருக்கும். எனினும் 2வது இன்னிங்ஸில் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பவுலிங்கை தேர்வு செய்வது சரியான முடிவாக பார்க்கப்பட்டது.

திடீர் திருப்பம்
இந்நிலையில் ரோகித் எதிர்பார்க்காத அளவிற்கு பிட்ச் நன்மை தந்துள்ளது. முதல் ஓவரிலேயே இது வேகப்பந்துவீச்சுக்கு மட்டுமே சாதகமான களம் என்பது என்ற அளவிற்கு இருந்தது. ஏனென்றால் ஒவ்வொரு பந்துகளும் எதிர்பார்த்ததை விட ஸ்விங் ஆகின. நியூசிலாந்து அணிக்கு ஸ்விங் ஆகும் களங்கள் பழக்கப்பட்ட ஒன்று தான். ஆனால் இந்த களம் ஸ்லோவாக இருக்கும் என நினைத்து ஏமாந்தனர். இதனால் முதல் ஓவரிலேயே முகமது ஷமி இன்ஸ்விங்கில் ஃபின் ஆலன் போல்ட் ஆனார்.

அடுத்தடுத்து விக்கெட்
ஆஸ்திரேலியாவில் உள்ள டெஸ்ட் களங்களை போல இருந்ததால் அனைத்து பேட்ஸ்மேன்களுமே பந்தை தொடுவதற்கு கூட தயங்கினர். இதனால் டெவோன் கான்வே ( 7), ஹென்றி நிகோலஸ் (2), டேரில் மிட்செல் (1) என அடுத்தடுத்து வெளியேறினர். பொறுப்புடன் நின்று விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டாம் லேதம் வெறும் 1 ரன்னுக்கு ஷர்துல் தாக்கூரிடம் சிக்கி வெளியேறினார்.

பரிதாபமான நிலை
நியூசிலாந்தின் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு சுருண்டதால் 10.3 ஓவர்கள் கடந்த பின்னரும் அந்த அணி வெறும் 15 ரன்களை மட்டுமே எடுத்து 5 விக்கெட்களை பறிகொடுத்தது. இதனால் 150 ரன்களையாவது அந்த அணி எட்டுமா என்ற எதிர்பார்பு எழுந்துள்ளது. இதே போல இந்தியாவுக்கு இந்த களம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications