கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி, வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே சில நாட்களுக்கு முன்பு விலகினார். இதைத்தொடர்ந்து புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்க விரும்புபவர்கள் தங்களிடம் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 9 ஆகும். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு ரவி சாஸ்திரிக்கு அடுத்த படியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தும் விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
இதேபோன்று வீரேந்தர் சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்டு பைபஸ் மற்றும் தோடா கணேஷ் ஆகியோரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்கு வங்க கிரிக்கெட் கூட்டமைப்பு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் வருகிற 10ந்தேதி மும்பையில் நடைபெறும் என கூறினார். இந்திய கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களாக சவுரவ் கங்குலி, சச்சின் தெண்டுல்கர் மற்றும் வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர் உள்ளனர்.