திடீர் பதற்றம்
ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் 72 ரன்கள், சுப்மன் கில் 50 ரன்கள் என சிறப்பாக ஆடியதால் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்கள் சேர்ந்தது. ஆனால் அடுத்த சில ஓவர்களிலேயே நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் வந்த 15 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானதால் 160 ரன்களுக்குள் இந்தியா 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர்.
மிடில் ஓவர் பார்ட்னர்ஷிப்
ஒருபுறம் சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடி 37 ரன்கள் எடுக்க, ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 80 ரன்களை விளாசினார். இருவரும் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் அனைவரும் இனி அதிரடி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் சரியாக சஞ்சு சாம்சன் அவுட்டானார். இதனால் 45.4 ஓவர்களில் இந்தியா 254 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆக்லாந்து மைதானம் மிகவும் சிறியது என்பதால் 300 ரன்களை தாண்டினால் மட்டுமே டிஃபண்ட் செய்ய முடியும்.
வாஷிங்டன் தந்த ஷாக்
ஒருபுறம் விக்கெட்கள் சரிய, ஸ்ரேயாஸ் ஐயரும் கடைசி நேரத்தில் பதற்றத்தில் இருந்தார். அப்போது உள்ளே வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் எதிரணிக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். முதல் 3 பந்துகளை நிதானமாக சிங்கள் அடித்து கவனித்த அவர், அடுத்து பிரமாண்ட சிக்ஸருடன் தனது ஆட்டத்தை தொடங்கினார். அவரை சாதாரணமாக எடைப்போட்ட நியூசி, பவுலர்களுக்கு அதன்பின் தான் தலைவலியே ஏற்பட்டது.
கடைசி நேர அதிரடி
அடுத்தடுத்து பவுண்டரிகள், சிக்ஸர்கள் என கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். மொத்தமாக வெறும் 16 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என 37 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் இந்தியா மிகவும் எளிதாக 306 ரன்களை குவித்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்குள் வந்த போதும், எங்கு விட்டுச்சென்றாரோ, அங்கிருந்தே தொடர்ந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.