“ஆட்டத்தை விடுங்கப்பா அத பாருங்க” போட்டியின் போது டிராவிட் செய்த விஷயம்.. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்
கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் சமனில் முடிவடைந்திருந்தாலும், இந்திய அணி பயிற்சியாளர் டிராவி செய்த விஷயம் அனைவரின் மனங்களையும் வென்றுள்ளது.
இரு அணிகளும் மோதிய இந்த போட்டி கான்பூரில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தில் இந்திய அணி கோட்டையை விட்டது.
டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார்.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்
இதன்பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. டாம் லாதம் 95 ரன்கள் மற்றும் வில் யங் 89 ரன்கள் விளாச அந்த அணி 296 ரன்கள் குவித்தது.
49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் மீண்டும் டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பியது. அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையை கட்ட,மீண்டும் ஒருமுறை ஸ்ரேயாஸ் ஐயர் காப்பாற்றினார். 125 பந்துகளை சந்தித்த அவர் 65 ரன்கள் அடித்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த சாஹா 61 ரன்கள் குவிக்க இந்திய அணி 234 /7 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.

நிதான தொடக்கம்
இதனால் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிதானமான தொடக்கத்தை கொடுத்தது. டாம் லாதம் (52), வில்லியம் சோமர்வில்லே (36) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாட மற்றவர்கள் சொதப்பினர். இதனால் ரன்களை குவிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து அணி 155 ரன்களுக்கெல்லாம் 9 விக்கெட்களை இழந்துவிட்டது. எனினும் இந்திய அணியால் 5ம் நாள் ஆட்ட முடிவில் கடைசி விக்கெட்டை எடுக்க முடியாததால் போட்டி சமனில் முடிவடைந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற மனநிலையுடன் ராகுல் டிராவிட் இருந்தார். ஏனென்றால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பதவியேற்றுக்கொண்ட பின்னர் விளையாடும் முதல் டெஸ்ட் இதுவாகும். இது சமனில் முடிந்ததால் அவர் சற்று மன வறுத்தத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அப்படியே மாறுபட்ட விஷயத்தை செய்துள்லார்.

டிராவிட் நன்கொடை
இந்த போட்டியில் பிட்ச்- மிகச்சிறப்பாக இருந்ததாக பாராட்டுக்கள் குவிகிறது. முதல் இன்னிங்ஸில் நியூஸி-யின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், இந்திய அணியின் ஸ்பின்னர்களுக்கும் என இரண்டிற்குமே சாதகமாக இருந்தது. இதுமட்டுமின்றி நல்ல ஸ்கோரும் அடிக்க முடிந்ததால். இதனால் பிட்ச்-ஐ பார்த்து வியந்துப்போன ராகுல் டிராவிட், பிட்ச்-ஐ தயார் செய்த மைதான ஊழியர்களுக்கு தனிப்பட்ட முறையில் ரூ.35,000 பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவரின் இந்த பண்பு, இந்தியாவில் இனி வரும் நாட்களில் பிட்ச் சிறப்பாக அமைய தூண்டுகோளாக இருக்கும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications