இலங்கை தொடர்
இந்திய அணி வரும் ஜூலை 13ம் தேதி முதல் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறது. இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 20 வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போட்டி அட்டவணை
இரு அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பயோ பபுள்
இந்நிலையில் இதற்கான இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஒன்று கூடியுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில் அவர்கள் 14 நாட்கள் குவாரண்டைனில் இருக்கவுள்ளனர். அங்கு கடும் குவாரண்டைனில் இருந்த பின்னர் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர் கொழும்புவிற்கு தனி விமானம் மூலம் செல்லவுள்ளனர்.
புகைப்படம்
இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைகளில் குவாரண்டைனில் உள்ள புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இளம் வீரர்கள் தங்களது முதல் சர்வதேச வாய்ப்புக்காக சிரித்த முகத்துடன் ஆவலுடன் உள்ளதை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் இலங்கைக்கு புறப்படும் தேதி குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.