லண்டன்:உலக கோப்பையில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் ஒரு நாள் ஓய்வுக்காக வெளியில் சென்றுள்ளனர்.
உலக கோப்பையில் தனது முதல் போட்டிக்குத் தயாராகி வரும் இந்திய அணி வரும் 5ம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது. உலக கோப்பை போட்டிகளுக்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கடுமையான பயிற்சிகளுக்கு இடையே கோலி தலைமையிலான அணியினர் ஒரு நாள் ஓய்வுக்காக வெளியில் சென்றுள்ளனர். கோலி, தோனி, ரோகித், தவான், ராகுல், ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடங்கிய அணி சென்றுள்ளது.
ஒட்டுமொத்த அணியும், சவுதாம்டனில் பெயிண்ட் பால் விளையாட்டிற்கு சென்றுள்ளனர். பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், மரங்களுடன் ஒரு மகிழ்ச்சியான நாள் என்று வீரர்களின் புகைப்படத்தை ட்விட் செய்துள்ளது.
அப்போது எடுத்த புகைப்படத்தை விராட் கோலி, ஷிகர் தவான் இருவரும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர். அணி வீரர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கும் அந்தப் புகைப் படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இணையத்தில் ரவுண்டு கட்டி வரும் இந்த போட்டோவை பார்க்கும் ரசிகர்கள் சிலர் விமர்சனம் செய்யாமல் இல்லை. எதற்காக சென்றோமோ... அதற்கான பணியை நிறைவு செய்வதில் கவனம் வேண்டும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கூறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது இந்தியா. அதன்பின் நடைபெற்ற வங்க தேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.