தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்
நியூசிலாந்து டெஸ்ட் தொடர் டிசம்பர் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் பின்னர் வரும் டிசம்பர் 9ம் தேதி தனி விமானம் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டிகள் என நெடும் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. தற்போது ஓய்வில் உள்ள இந்திய சீனியர் வீரர்கள், இந்த தொடரின் போது மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர்.
சுற்றுப்பயணம் ரத்து?
ஆனால் இந்த சுற்றுப்பயணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா தொற்று உருவாகியுள்ளது. ஒமிக்ரான் என்ற அந்த கொரோனா வகையானது தற்போது வேகமாக பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் இந்திய வீரர்கள் அங்கு செல்வது ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் தேர்வையும் நிறுத்திவைத்துள்ளது.
ஒத்திவைப்பு
இந்நிலையில் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் ஒரு வாரத்திற்கு தள்ளிவைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் வரும் டிசம்பர்.9ம் தேதியன்று அங்கு பயணம் செய்யலாமா என்பது குறித்து மத்திய அரசிடம் பிசிசிஐ அனுமதி கேட்டிருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் நிலவும் சூழல் குறித்து இன்னும் தெளிவாக ஏதும் தெரியாததால் ஒரு வார காலத்திற்கு புறப்பாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அனைவரும் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்படுவார்கள்.
ஏ அணி
இந்திய ஏ அணி தற்போது தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் தான் உள்ளது. அங்கு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர். அவர்களும் விரைவில் இந்தியாவுக்கு திரும்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்..