தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்
இந்திய அணியை மொத்தமாக 25 பேர் கொண்ட குழுவாக அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நேற்று கூடியது. இதில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மனக் கசப்புகள் ஏற்பட்டதால் முடிவுகள் எட்டப்படவில்லை.
கருத்து வேறுபாடு
டெஸ்ட் தொடருக்கான அணி தொடர்பாக முதலில் ஆலோசிக்கப்பட்டது. இதில் அஜிங்கியா ரகானே மற்றும் இஷாந்த் சர்மாவை கழட்டிவிட தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் டிராவிட், கோலி ஆகியோர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்பதால் அவர்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என வாதம் செய்துள்ளனர். இதனால் கார சார விவாதம் நடந்துள்ளது.
தள்ளிவைப்பு
இதனால் டெஸ்ட் அணியின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நாளை தான் (டிச.9) இது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க ஒருநாள் போட்டிக்கான அணி குறித்து கண்டுக்கொள்ளவே படவில்லை எனத்தெரிகிறது. அதனை முடிவு செய்ய கால அவகாசம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
என்ன காரணம்
தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் போட்டி தொடர் ஜனவரி 19ம் தேதியன்று தான் தொடங்குகிறது. இதற்கு இன்னும் ஒருமாத காலத்திற்கும் மேல் இருப்பதால், விஜய் ஹசாரா கோப்பையை பார்க்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. இந்த தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்துக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.