பண்ட்-ஐ நம்பி ஏமாந்த இந்தியா.. 3வது ஒருநாள் போட்டியில் அடுத்தடுத்த விக்கெட்..நியூசி-க்கு சுலப இலக்கு
க்ரைஸ்ட் சர்ச்: நியூசிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பெரும் சொதப்பலுக்கு பின் இலக்கை நிர்ணயித்துள்ளது.
இரு அணிகளும் மோதிய இந்த போட்டி க்ரைஸ் சர்ச் நகரத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த முறையும் இந்திய கேப்டன் ஷிகர் தவான் டாஸில் தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தது. எனினும் கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே காப்பாற்றினார்.

சொதப்பிய டாப் ஆர்டர்
ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் நிதானமான ரன் குவிப்பில் தான் ஈடுபட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக ஷிகர் தவான் 28 ரன்களுக்கும், சுப்மன் கில் 13 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் பின்னர் வந்த நம்பிக்கை நட்சத்திரமான சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 6 ரன்களுக்கு அவுட்டாகினார்.

சஞ்சுவுக்கு துரோகம்
இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், சஞ்சு சாம்சனை முந்தி வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட் வழக்கம் போல சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 16 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 10 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். பவுலர் என்ற கோட்டாவில் வாய்ப்பு பெற்ற தீபக் ஹூடா நியூசிலாந்து பவுலர்களின் வேகத்தை சமாளிக்க முடியாமல் 12 ரன்களுக்கெல்லாம் நடையை கட்டினார். மறுமுணையில் தூண் போல நிலைத்து நின்று ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களுக்கு துரதிஷ்டவசமாக அவுட்டானார்.

வாஷிங்டனின் போராட்டம்
இதனால் இந்திய அணி 149 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்களை இழந்து திணறியது. அப்போது களமிறங்கிய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனி ஒருவராக அணியை மீட்டுக்கொண்டு வந்தார். ஒருபுறம் அவர் பந்துகளில் ரன்களை அடிக்க, மறுபுறம் அனைத்து விக்கெட்களும் சென்றன. இதனால் 47.3 ஓவர்களில் இந்திய அணி 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

வெற்றி பெற முடியுமா?
220 ரன்கள் என்பது இந்த பிட்ச்-ல் சுலபமாக விரட்டக்கூடிய ஒன்று தான். ஆனால் பிட்ச்-ல் அதிக புற்கள் இருப்பதால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவியாக இருக்கும். இந்திய அணியில் உள்ள உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார் காம்போ பவர் ப்ளேவிலேயே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.


Click it and Unblock the Notifications