சூர்யகுமாருக்கு வேட்டு வைத்த ஸ்ரேயாஸ்.. பிசிசிஐ-யின் ரகசிய பிளான்.. இந்திய டி20 அணியில் மாற்றம்?
மும்பை: 2026ஐபிஎல் தொடரில் ஒருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியிலும், பேட்டிங்கிலும் விஸ்வரூபம் எடுத்து வர, மறுபுறம் தற்போதைய இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியை தீர்மானிக்கும் களமாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது உச்சகட்ட ஃபார்மில் உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் விளையாடிய விதம் ஒட்டுமொத்த தேர்வுக் குழுவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வெறும் 35 பந்துகளில் 66 ரன்கள் விளாசி தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், கேப்டனாகவும் பஞ்சாப் அணியை இதுவரை ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் கம்பீரமாக வழிநடத்தி வருகிறார்.

சூர்யகுமாருக்கு வந்த சோதனை
ஸ்ரேயாஸின் இந்த அதிரடி வளர்ச்சி, தற்போதைய இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. 2026 டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றிருந்தாலும், சூர்யகுமாரின் பேட்டிங் ஃபார்ம் கடந்த ஒரு ஆண்டாகவே கவலைக்கிடமாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள சூர்யகுமார், உலகக்கோப்பை தொடரிலும் அமெரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியைத் தவிர மற்ற ஆட்டங்களில் ரன் எடுக்கத் திணறினார். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அவர் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது.
பிசிசிஐ-யின் புதிய திட்டம்
பிசிசிஐ தற்போது 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் டி20 தொடர் மற்றும் அடுத்த இரண்டு டி20 உலகக்கோப்பைகளை மனதில் வைத்து 'செயல்திறன் அடிப்படையிலான தலைமை' என்ற புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது. அதாவது, கேப்டனாக இருப்பவர் பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். வரவிருக்கும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களுக்குப் பிறகு சூர்யகுமாரின் கேப்டன் பதவி குறித்து பிசிசிஐ மறுபரிசீலனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏன் ஸ்ரேயாஸ் ஐயர்?
ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் பேட்டராக மட்டுமல்லாமல், ஒரு வெற்றிகரமான கேப்டனாகவும் தன்னை நிரூபித்துள்ளார். 2020-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது, 2024-ல் கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தது என அவரது சாதனைப் பட்டியல் நீள்கிறது. தற்போது பஞ்சாப் அணியையும் முதலிடத்தில் வைத்துள்ளார். ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தற்போது கேப்டன்சி ரேசில் முன்னிலையில் இல்லாத நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் அடுத்த கேப்டனாவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சூர்யகுமார் யாதவ் தனது பேட்டிங் ஃபார்மை மீட்கத் தவறினால், இந்திய அணியின் மகுடம் ஸ்ரேயாஸ் ஐயர் வசம் செல்வது உறுதி என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.


Click it and Unblock the Notifications