மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர், 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை என 2 ஐசிசி கோப்பைகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். தொடர்ச்சியாக 2 உலகக்கோப்பைகளை வென்றுள்ள நிலையில், முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அவருக்கு ஒரு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார். கம்பீரின் உண்மையான சவால் இன்னும் ஒரு வருடத்திற்குப் பிறகு 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தான் காத்திருக்கிறது என கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் வானிலையும், அங்குள்ள மைதானங்களும் அவருக்கு பெரும் சவாலாக அமையும் என்றும், ஆனால் தற்போதுள்ள வலுவான அணியை வைத்து அவர் அந்த சவாலை எளிதில் முறியடிப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கங்குலி கூறினார். கடந்த 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது.

மேலும், 2027 உலகக்கோப்பை மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என்பதால், கோப்பையை வென்று கொடுக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு கம்பீருக்கு உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கம்பீர் அணியை இன்னும் மேம்படுத்த வேண்டும் என கங்குலி வெளிப்படையாகக் கூறினார்.
சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சுழற்பந்து வீச்சுக்கு மட்டுமே சாதகமான மைதானங்களை தயார் செய்வதை கைவிட வேண்டும். ஆடுகளத்தைப் பற்றி அதிகமாக சிந்திப்பதை அவர் தவிர்க்க வேண்டும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுக்கும் சமமான மைதானங்களில் விளையாடினால் மட்டுமே சிறப்பான முடிவுகள் கிடைக்கும் என்று இங்கிலாந்து தொடரை சுட்டிக்காட்டி கங்குலி விளக்கினார்.

அதேநேரம், கம்பீர் ஒரு மிகச்சிறந்த பயிற்சியாளர் என்றும், குறிப்பாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் அபாரமாக செயல்படுகிறார் என்றும் கங்குலி பாராட்டினார். அவருக்கு நாம் இன்னும் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தனது ஆதரவை தெரிவித்தார். ஐபிஎல் 2026 தொடர் முடிவடைந்ததும், கம்பீர் தனது முழு கவனத்தையும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பக்கம் திருப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
