ஜடேஜாவுக்கு காயம்
முதல் 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளதால், இந்த முறை கோப்பையை இந்தியா தான் வெல்லும் என ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் வகையில் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். இதனை பிசிசிஐ-யே உறுதி செய்துள்ளது.
என்ன காயம்
ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது காலின் மூட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. காயத்தின் தன்மை மிகவும் பெரிதாக இருப்பதால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என மருத்துவக்குழு கூறியுள்ளனர். ஜடேஜாவுக்கு மாற்று வீரராக சுழற்பந்துவீச்சாளர் அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். பேக் அப் வீரராக இருந்த அவரை உடனடியாக துபாய்க்கு அழைத்துள்ளனர்.
பெரும் பின்னடைவு
இந்திய அணி அடுத்ததாக வரும் செப்டம்பர் 4ம் தேதியன்று சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் மோதவுள்ளது. அநேகமாக பாகிஸ்தான் அணியுடன் தான் இந்த போட்டி இருக்கும் என்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இப்படிபட்ட சூழலில் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை
துபாயில் சிகிச்சை பெற்று வரும் ஜடேஜா விரைவில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்து செல்லப்படுவார். அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களில் தயார்படுத்தப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.