இந்திய டி20 அணியின் புதிய கேப்டன்.. கில், திலக் வர்மா, ஸ்ரேயாஸ்.. கம்பீர் சொல்வது தான் இறுதி!
மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக அவரது பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக உள்ள நிலையில், அவருக்குப் பதிலாக சுப்மன் கில், திலக் வர்மா அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் ஒருவரை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
டி20 உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டனாக இருந்தாலும், சூர்யகுமார் யாதவ் கடந்த சில காலமாகச் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் 20 ரன்களுக்குள்ளேயே ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றி வருகிறார். ஒரு சில அதிரடி இன்னிங்ஸ்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அவரது சராசரி மிகவும் சரிந்துவிட்டது. இதனால் அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பிசிசிஐ-க்கு ஏற்பட்டுள்ளது.

கம்பீர் - ஸ்ரேயாஸ் மோதல்?
கேப்டன் பதவிக்கான ரேசில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பலமான தேர்வாக இருக்கிறார். ஆனால், அவரது தேர்வு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் கையில் தான் உள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது, கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸை விட ஆலோசகராக இருந்த கம்பீருக்கே அதிகப் புகழ் கிடைத்தது. இதில் ஸ்ரேயாஸ் அதிருப்தியில் இருந்ததால், கம்பீருக்கும் அவருக்கும் இடையிலான உறவு தற்போது சுமுகமாக இல்லை எனத் தெரிகிறது. இதனால் ஸ்ரேயாஸின் கேப்டன் கனவுக்கு கம்பீர் முட்டுக்கட்டை போட வாய்ப்புள்ளது.
கில் அல்லது திலக் வர்மா?
குஜராத் டைட்டன்ஸ் அணியை 2026 ஐபிஎல் தொடரில் அபாரமாக வழிநடத்தி வரும் சுப்மன் கில்லின் கேப்டன்சி மதிப்பு உயர்ந்துள்ளது. தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் கில்லை அனைத்து வடிவ போட்டிகளுக்கும் கேப்டனாக்கவே விரும்புகிறார். ஒருவேளை சூர்யகுமார் நீக்கப்பட்டால், கில் தொடக்க வீரராக மீண்டும் அணிக்குத் திரும்புவார். அப்போது சஞ்சு சாம்சன் 3-வது இடத்திற்கும், இஷான் கிஷன் 4-வது இடத்திற்கும் தள்ளப்படலாம்.
மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மாவும் கேப்டன்சி ரேசில் இணைந்துள்ளார். அவரது தலைமைத்துவத் திறமையைச் சோதிக்கவே 'இந்தியா ஏ' அணியின் கேப்டனாக அவரை பிசிசிஐ நியமித்துள்ளது. அங்கே அவர் சிறப்பாகச் செயல்பட்டால், சீனியர் அணிக்கும் அவரே கேப்டனாக வாய்ப்புள்ளது.
15 வயது சிறுவன்
வைபவ் இந்தக் கேப்டன் தேர்வில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறார். 2028 ஒலிம்பிக் போட்டிகளைக் கருத்தில் கொண்டு வைபவ் சூர்யவன்ஷியை அணியில் நிலைநிறுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அவருக்கு ஏற்றவாறு அணியின் கட்டமைப்பை மாற்றக்கூடிய ஒரு கேப்டனையே தேர்வுக் குழுவினர் முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது. அடுத்த சில வாரங்களில் இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
