வைபவ் சூர்யவன்ஷி குறித்து பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு.. சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு
மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, விரைவில் இந்திய அணியில் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கோரிக்கையை ஏற்று, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு இந்திய அணித் தேர்வில் வைபவ் சூர்யவன்ஷியின் பெயரை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
2026 ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ஜூன் மாதம் அயர்லாந்தில் நடைபெற உள்ள டி20 தொடருக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தொடரில் அவர் அறிமுகமானால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்திய அணிக்காக விளையாடும் மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார். சச்சின் தனது 16-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

"அயர்லாந்து தொடருக்கான பரிசீலனையில் வைபவ் சூர்யவன்ஷி உள்ளார். தேர்வுக் குழுவினர் அவரை மற்ற முன்னணி வீரர்களுடன் இணைந்து தேர்வு செய்துள்ளனர்" என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அயர்லாந்து அணிக்கு எதிரான இந்தத் தொடர் ஜூன் 26 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. சிறிய அணிக்கு எதிராக வாய்ப்பளித்து அவரது திறமையைச் சோதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அங்கு அவர் சிறப்பாகச் செயல்பட்டால், ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைபவ் சூர்யவன்ஷியின் அபார திறமையை பிசிசிஐ முன்னாள் பொருளாளரும், தற்போதைய ஐபிஎல் தலைவருமான அருண் துமால் வெகுவாகப் பாராட்டியுள்ளார். "சூர்யவன்ஷியின் பேட்டிங் வியக்க வைக்கிறது. அவரது திறமைக்கு இந்திய அணியில் அவர் இளம் வீரராக அறிமுகமாக முழு தகுதியும் உடையவர்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2025 ஐபிஎல் ஏலத்தில் 1.1 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி, தனது 3-வது போட்டியிலேயே குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து, இந்தியாவுக்கு 6-வது முறையாகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பந்துவீச்சை அசாதாரணமாகச் சிக்ஸர்களுக்குப் பறக்கவிட்டதே, இவரை உடனடியாக இந்திய அணிக்குத் தேர்வு செய்ய பிசிசிஐ-ஐ தூண்டியுள்ளது. ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் மற்றும் மைக்கேல் வான் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் இவரை உடனடியாக இந்திய அணிக்குத் தேர்வு செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications