பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியை வரவேற்பதற்காக ஒட்டுமொத்த ரசிகர்கள் படையும் மும்பை விமான நிலையத்தை சூழ்ந்துள்ளது. பார்படாசில் கடந்த சனிக்கிழமை இந்திய அணி தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பை, 13 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

பார்படாசில் புயலில் சிக்கி அங்கேயே தங்கி இருந்த இந்திய கிரிக்கெட் அணி இன்று அதிகாலை தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தது. டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து அங்கிருந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மும்பை வருகின்றனர். இதற்காக மும்பை விமான நிலையத்தில் ரசிகர்கள் பட்டாளம் கூடி இருக்கின்றது.
வீரர்களை அழைத்து செல்வதற்காக பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மும்பை விமான நிலையம் முழுவதும் இந்திய ரசிகர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. இதேபோல் விமான நிலையத்தில் உள்ளேவும் இந்திய அணி வீரர்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள்.
இதனால் விமான நிலையத்திலிருந்து வீரர்கள் எப்படி வரப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்ற போது அந்த அணி மெல்போர்ன் வந்து அடைந்தது. அப்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களை வரவேற்க ஒரு ரசிகரும் கூட திரளவில்லை. ஏதோ சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பியது போல் ஹாயாக வந்தார்.
ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தேசிய விளையாட்டு ஆகும். அப்படி இருக்கும் சூழலில் ஒருவர் கூட ஆஸி. கிரிக்கெட் அணி வரவேற்கவில்லை. ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு தனி மதம் போல் இருக்கின்றது. இதனால் இந்திய அணியை வரவேற்க மும்பை விமான நிலையத்தில் இருக்கும் கூட்டத்தையும் ஆஸ்திரேலியாவில் இருந்த சூழலையும் ஒப்பிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.