மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களை வரவேற்க ஒட்டுமொத்த மும்பை மக்களும் வீதிக்கு வந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பை கொடுத்து வருகின்றனர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வியாழன் அதிகாலை டெல்லி வந்து அடைந்தது.
இதை அடுத்து முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இந்திய வீரர்கள் மாலை மும்பைக்கு வந்து சேர்ந்தார்கள். மும்பை விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

இதனை அடுத்து வீரர்கள் சொகுசு பேருந்து மூலம் தனியார் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து திறந்தவெளி சிறப்பு பேருந்து இந்திய அணி வீரர்கள் நின்று ரசிகர்கள் இடம் உலக கோப்பையை காட்டியபடி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கிரிக்கெட் வீரர்களை பார்ப்பதற்காக ஒட்டுமொத்த மும்பை மக்களும் மரைன் டிரைவ் என்ற சாலையில் கூடியிருக்கிறார்கள்.
லட்சக்கணக்கில் மக்கள் சூழ்ந்ததால் பேருந்து ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. அப்போது ஒவ்வொரு வீரர்களும் உலக கோப்பையை ரசிகர்களிடம் காண்பித்த படியே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்களும் சினிமா தியேட்டரில் பேப்பரை துண்டுகளாக கிழித்து வீசி கொண்டாடுவது போல் இந்திய அணி வீரர்கள் மீதும் வீசி வரவேற்பில் ஈடுபட்டனர்.
இந்த பேருந்தில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விக்ரம் ராத்தோர் மற்றும் பராஸ் மாம்ப்ரே உள்ளிட்ட பயிற்சியாளர்களும் இருந்தனர். தேசிய கொடியை ஏந்தியவாறு விராட் கோலி, ரோகித் ஆகியோர் பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது ரசிகர்கள் வீரர்களுக்கு கை கொடுக்க முயற்சி செய்தனர். வான்கடே மைதானத்திற்கு வெறும் இரண்டு கிலோமீட்டர் தான் என்றாலும் ஆமை வேகத்தில் பேருந்து நகர்ந்து செல்வதால் இன்றைய நிகழ்ச்சி முடிய நீண்ட நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் மாலை முதல் லேசான மழை பொழிவு இருந்தது. அதையும் மீறி கூட்டம் கலையாமல் நின்றது மாலை நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரவு ஆகிவிட்டது. அப்போது வானத்திலிருந்து நட்சத்திரங்கள் கீழே இறங்கி வீதி உலா செல்வது போல் இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் தற்போது வெற்றி கொண்டாட்டத்தில் நகர்வலம் சென்று கொண்டிருக்கின்றனர்.