கில்-ன் ருத்ரதாண்டவம்.. சாஹல் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்..3வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரம்
ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா அசத்தியுள்ளது.
இரு அணிகளும் மோதிய இந்த போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நேற்று இரவு தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து அதிரடி காட்டினர்.

இந்திய இன்னிங்ஸ்
தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் - ஷுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த சூழலில் தான் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரத்திற்கு பின்பு தான் மழைப்பொழிவு நின்றதால் ஆட்டம் 36 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய வீரர்கள் அதிரடி காட்ட தொடங்கினர்.

கில்-ன் அதிரடி
கேப்டன் ஷிகர் தவான் 74 பந்துகளில் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - ஸ்ரேயாஸ் ஐயர் வேகமாக ரன்களை உயர்த்தினர். இதனால் 36 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 98 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களும் எடுத்தனர்.

சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய பவுலர்களின் வேகத்தை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். டாப் ஆர்டரில் சாஹ் ஹோப் (22), கெயில் மேயர்ஸ் (0), ஷமார் ப்ரூக்ஸ் (0) என விக்கெட்டை பறிகொடுத்தனர். மிடில் ஆர்டரில் பிராண்டன் கிங் (42) - நிகோலஸ் பூரண் (42) மட்டும் சிறிது பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எனினும் இது நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை.

இந்தியா அபாரம்
மற்ற வீரர்கள் அனைவரும் மொத்தமாக சொதப்பினர். இதனால் 26 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 137 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை வைட் வாச் செய்து அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications