வைபவ் சூர்யவன்ஷியை இந்திய சீனியர் அணியில் சேர்க்க மறுத்த பிசிசிஐ தேர்வுக் குழு.. காரணம் இதுதான்
மும்பை: 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, முதன்முறையாக 'இந்தியா ஏ' அணியில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தனது அசாத்திய அதிரடி ஆட்டத்தால் உலகையே வியப்பில் ஆழ்த்திய இவரை, இப்போதே இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், பிசிசிஐ மிகவும் நிதானமான ஒரு முடிவை எடுத்துள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, வரும் ஜூன் 9 முதல் 21 வரை இலங்கையில் நடைபெற உள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான 'இந்தியா ஏ' அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 15 வயதிலேயே இவருக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த மிகப்பெரிய நட்சத்திரமாக இவர் உருவெடுப்பதற்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது.

ஏன் சீனியர் அணி இல்லை?
சச்சின் டெண்டுல்கர் 15 வயதிலேயே இந்திய சீனியர் டெஸ்ட் அணியில் அறிமுகமானார் என்பதற்காக, வைபவையும் அதே வேகத்தில் சீனியர் அணியில் தள்ள தேர்வுக் குழுவினர் விரும்பவில்லை. ஆரம்பத்தில் அதிரடியாக அறிமுகமாகி, பின்னர் காணாமல் போன பிரித்வி ஷா போன்ற வீரர்களின் அனுபவத்தை ஒரு பாடமாக பிசிசிஐ கொண்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தம் ஒரு 15 வயது சிறுவனைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் உறுதியாக உள்ளார்.
சாதனைப் பயணம்
வைபவ் சூர்யவன்ஷியின் வளர்ச்சி மிகவும் ஆச்சரியமானது. 12 வயதிலேயே ரஞ்சி கோப்பை போட்டியில் அறிமுகமானார். 13 வயதில் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் விளையாடினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராகச் சதம் விளாசி இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியப் பங்காற்றினார். ஐபிஎல் 2025 மற்றும் 2026 சீசன்களில் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து தனது திறமையை நிரூபித்தார். இதுவே அவர் 15 வயதில் இந்தியா ஏ அணியில் தேர்வு செய்யப்பட முக்கிய காரணம்.
திறந்திருக்கும் கதவுகள்
இலங்கையில் நடைபெறும் 'இந்தியா ஏ' தொடர் ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்திய சீனியர் அணியின் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது. ஒருவேளை இலங்கை மண்ணில் 'இந்தியா ஏ' அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் அதிரடி காட்டினால், அவரை அப்படியே இங்கிலாந்து செல்லும் சீனியர் அணியில் சேர்க்கவும் பிசிசிஐ ரகசியத் திட்டம் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேவைப்படும் முதிர்ச்சி
ஐபிஎல் போட்டிகளில் ஆடுவது வேறு, சர்வதேச டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளில் ஆடுவது வேறு. ஏபி டிவில்லியர்ஸ் போல 360 டிகிரியில் டி20யில் அதிரடியாக ஆட வேண்டும், அதே சமயம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு முறை டிவில்லியர்ஸ் 297 பந்துகளைச் சந்தித்து 43 ரன்கள் எடுத்து விக்கெட்டைப் பாதுகாத்தது போலவும் ஆடத் தெரிய வேண்டும்.
இந்த வகையான முதிர்ச்சியை வைபவ் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே பிசிசிஐ-யின் எதிர்பார்ப்பு. இலங்கைப் பயணம் அவருக்கு இந்த முதிர்ச்சியைத் தரும் என நம்பப்படுகிறது. அங்கேயும் இவர் ரன் மழை பொழிந்தால், இந்திய சீனியர் அணியின் கதவுகள் இவருக்காகத் தானாகவே திறக்கும். 15 வயது சிறுவனின் இந்த அசுர வளர்ச்சி இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது என்பது உண்மை. அதே சமயம் அவரது திறமையை பாதுகாப்பதும் பிசிசிஐ-யின் கடமை,


Click it and Unblock the Notifications