லார்ட்ஸ்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் தோல்வி, எங்களை அவமானத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது என்று தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டுபிளெசிஸ் கூறியிருக்கிறார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய தென் ஆப்ரிக்க தோல்வியடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. 2003ம் ஆண்டுக்குப் பிறகு லீக் சுற்றுடன் அந்த அணி வெளியேறுவது இதுவே முதல் தடவையாகும்.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்க அணி ஆப்கானிஸ் தானை மட்டும் வென்று 3 புள்ளிகள் பெற்றிருக்கிறது. இனி வரக் கூடிய போட்டிகளில் கிடைக்கும் வெற்றி, தோல்வி அந்த அணிக்கு எந்த விதத்திலும் உதவாது. அந்த அணியின் உலக கோப்பை சாம்பியன் கனவு இந்த முறையும் கவிழ்ந்துவிட்டது.
தோல்வி பற்றி செய்தியாளர்களிடம் கேப்டன் டுபிளெசிஸ் கூறியதாவது: நாங்கள் பொறுப்புடன் விளையாடவில்லை. அதைத் தான் போட்டி முடிவுகள் எங்களுக்கு சொல்கின்றன.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய விதம் எங்களை அவமானத்தின் விளிம்பிற்கே சென்று சேர்த்து விட்டது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில், தென் ஆப்ரிக்க உலக கோப்பையில் இதுபோல குறைந்த புள்ளிகளுடன் வெளியேறுவது அவமானமாக இருக்கிறது.
சராசரிக்கும் குறைவாகவே விளையாடி இருக்கிறோம். அதேசமயம் தென் ஆப்ரிக்க அணியின் கேப்டனாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. எனக்கு பெருமையும் கூட. நாங்கள் சரியாக விளையாடாததால் எங்களை விமர்சிக்க மக்களுக்கு உரிமை உள்ளது என்றார். உலக கோப்பை முடிந்த பிறகு தென் ஆப்ரிக்க மூத்த வீரர்கள் இம்ரான் தாஹிர், டுமினி, ஸ்டெயின் ஆகியோர் ஓய்வை அறிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.