போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடத்தை இழந்தது குறித்து பெரிதாக கண்டு கொள்வதிற்கில்லை. பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடிக்கவில்லை என்றும் அதேபோல இந்தியாவும் தோல்வியடைந்து முதலிடத்தை பறிகொடுக்கவில்லை என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா. ஆனால், முதலிடத்தை தொடர்ந்து தக்கவைக்க வேண்டுமானால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால், தொடர் மழை காரணமாக அப்போட்டி டிராவில் முடிந்ததால், இந்திய அணி டெஸ்ட் கிரிக்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது. இதனால், பாகிஸ்தான் அணி முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது.
இது குறித்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி கூறியதாது: பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடிக்கவில்லை. அதேபோல இந்தியாவும் தோல்வியடைந்து முதலிடத்தை பறிகொடுக்கவில்லை. இந்தியா கடைசியாக விளையாடிய போட்டி டிரா ஆனதாலே பாகிஸ்தான் முதலிடத்தை பிடிக்க முடிந்தது. தற்போது உள்ள தரவரிசை விரைவில் மாற்றமடையும்.
இந்தியாவை விட மற்ற அணிகள் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளன. எனவே இந்தியாவும் அதிக போட்டிகளில் விளையாட வேண்டும். தரவரிசையில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம் என்றும் தரவரிசைக்காக தற்போது விளையாடவில்லை என்று கூறினார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் பின்வரிசையில் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் மற்றும் விக்கெட் கீப்பர் சகாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த விராத் கோஹ்லி, இந்த தொடரில் அவர்களது பங்களிப்பு முக்கியமானது என்றார்.
இந்திய அணியின் சிறப்பு என்னவென்றால், வீரர்கள் தன்னலமற்று தங்களது பங்களிப்பை அணிக்கு அளிப்பது தான். உலகில் தலைசிறந்த அணியாக இருக்க வேண்டும் என்றால், இதே அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று விராத் கோஹ்லி கூறினார்.