இஸ்லாமாபாத்: அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. பந்தை எறிவதாக தடை விதிக்கப்பட்டுள்ள முகமது ஹபீசும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரம் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் காயம் காரணமாக அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று மதியம், அந்த நாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

அணி வீரர்கள் விவரம்: மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அகமது ஷெசாட், முகமது ஹபீஸ், சர்பராஸ் அகமது, யூனிஸ் கான், ஹரீஷ் சொகைல், உமர் அக்மல், சோயிப் மக்சூட், அப்ரிடி, யாசிர் ஷா, முகமது இர்பான், ஜுனைட் கான், ஈசான் அடில், சொகைல் கான், வகாப் ரியாஸ்.
இந்த பட்டியலில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது குல்லுக்கு காயம் ஏற்பட்டது. அந்த காயம் இன்னும் சரியாகவில்லை என்பதால் உலக கோப்பைக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. அதேபோல ஆல் ரவுண்டரும், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவருமான சோயிப் மாலிக்கிற்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. அதிரடி வீரர் கம்ரான் அக்மலுக்கும் கல்தா தரப்பட்டுள்ளது.
அதே நேரம் மூத்த வீரர்கள் யூனிஸ்கான், உமர் அக்மல், அப்ரிடி ஆகியோருடன் மிஸ்பா உல் ஹக்கும் கை கோர்த்துள்ளார். இந்தியாவை போலவே, பாகிஸ்தானிலும் உலக கோப்பை போட்டியில் முதல்முறையாக ஆடப்போகும் வீரர்கள்தான் அதிகம்பேர் உள்ளனர்.
பாகிஸ்தானின் அணி தேர்வு இரு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று, முகமது ஹபீசின் தேர்வாகும். இவர் பந்தை எறிவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஐசிசியால் தடை செய்யப்பட்ட வீரர். சென்னையில் சமீபத்தில் அவரது பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதும், அவர் பந்தை எறிவதாகவே ரிசல்ட் வந்தது. அந்த சர்ச்சை இருக்கும் நிலையிலும், ஐசிசியை கண்டுகொள்ளாமல் ஹபீசை பாகிஸ்தான் தேர்வு குழு தேர்வு செய்துள்ளது.
உலக கோப்பைக்கு முன்பாக ஹபீஸ் தன்மீது தவறு இல்லை என்று நிரூபித்தால் மட்டுமே, களத்தில் இறங்க முடியும் என்பதால் அவரது தேர்வு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதேபோல, சொகைல் கான் தேர்வும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான சொகைல் கான், கடைசியாக 2011ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியதோடு சரி. அதன்பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடவேயில்லை.
இந்திய அணியில் திடீரென ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டதைபோலவே, பாகிஸ்தானில் சொகைல் கான் உள்ளே வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.