கொழும்பு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கையின் குமார்சங்ககாரா, பிரிவு உபசார நிகழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார்.
இலங்கை அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா, சமீபத்தில் முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடருடன், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை தோற்றது. அப்போட்டியுடன் சங்ககாரா ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்தார் சங்ககாரா. தற்போது இலங்கையில் இந்தியா சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்றுடன் முடிந்தது. இப்போட்டியுடன், சங்ககாரா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். எனவே, போட்டி முடிந்ததும் மைதானத்தில் பிரிவுபசார நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
சங்ககாராவின் பெற்றோர், குடும்பத்தார், நண்பர்களும் மைதானத்திற்கு வந்திருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய சங்ககாரா, 15 வருட காலமாக கிரிக்கெட்டை நேசித்து ஆடியதாகவும், ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.
தனது குடும்பத்தார் எப்போதாவதுதான் தனது ஆட்டத்தை பார்க்க மைதானத்துக்கு வருவார்கள் என்றும் தற்போது அவர்கள் வந்திருப்பது நெகிழ்ச்சியை தருகிறது என்றும் கூறிய சங்ககாராவின் கண்களில் அப்போது நீர் ததும்பியது.
சுதாரித்துக்கொண்ட சங்ககாரா, "நான் எப்போதுமே எமோஷனல் ஆக மாட்டேன். ஆனால் இப்போது எமோஷனல் ஆகிவிட்டேன். சாரி" என்று தெரிவித்தார். பேச்சின் பெரும்பாலான நேரங்களில் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தாரை புகழ்ந்து பேசிய சங்ககாரா, இலங்கை ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி கூறவும் மறக்கவில்லை.