ஹைதராபாத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜுக்கு வீட்டு மனை மற்றும் ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்.
இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. தோல்வியை சந்தித்தாலும், கடுமையாக போராடிய இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தியா திரும்பிய மகளிர் அணியினர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மித்தாலிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மித்தாலி ராஜூக்கு ஒரு கோடி ரூபாய் ,வீ்ட்டுமனை பரிசு அளிக்கப்படும் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
இதேபோல வீராங்கனைகளுக்கு அவரவர் சொந்த மாநிலங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பி அவர்களை வரவேற்றனர்.