மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாற்று சாதனையை படைக்கும் என்று டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும் பிடித்த அணியாக தென்னாப்பிரிக்கா இருக்கும். அந்த அணியில் உள்ள வீரர்களின் திறமைக்கு, இந்நேரம் குறைந்தது 2 உலகக்கோப்பையையாவது வென்றிருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு டி20 உலகக்கோப்பையை கூட வெல்ல முடியாமல் பரிதாபமாக உள்ளது.

ஆனால் வழக்கமாக உலகக்கோப்பை தொடர் என்றால் உற்சாகமாக வரும் தென்னாப்பிரிக்கா அணி இம்முறை உற்சாகமின்றி உள்ளது. உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை அண்டர்டாக்ஸ் அணிகளை எப்போதும் நம்ப முடியாது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணியை அண்டர்டாக்ஸ் அணியிலும் சேர்க்க முடியாது, அரையிறுதிக்கு செல்லும் அணிகளின் பட்டியலிலும் சேர்க்க முடியாது.
இந்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர், இம்முறை புதிய வரலாறு படைப்போம் என்று கூறியுள்ளார். உலகக்கோப்பை தொடர் குறித்து டேவிட் மில்லர் கூறுகையில், இம்முறை நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று உறுதியாக நம்புகிறோம். நாங்கள் இதுவரை உலகக்கோப்பையை வெல்லவில்லை என்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் அதனை ஒரு சுமையாக என்றும் கருதியதில்லை. கடந்த கால தோல்விகள் என்னை ஒருபோதும் பாதிக்கவில்லை. கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்தும் ஒரு வாய்ப்பு தான். அதனால் இந்த உலகக்கோப்பையை ஒரு வாய்ப்பாகவே கருதுகிறோம். அதேபோல் எங்களின் கேப்டன் டெம்பா பவுமா மீதான விமர்சனங்கள் அதிகமாக இருந்தது.
ஆனால் விமர்சித்தவர்களுக்கு கடந்த 10 போட்டிகளில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் விளாசி பதிலடி கொடுத்துள்ளார், டெம்பா பவுமா மிகச்சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக அணியை வழிநடத்தினார் என்று தெரிவித்துள்ளார்.