லண்டன்: கிரிக்கெட் வரலாற்றிலேயே, ஒரு டெஸ்ட் கேப்டனாக தான் தலைமையேற்ற முதல் 10 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத முதல் கேப்டன் என்ற வரலாற்று சாதனையை செய்திருக்கிறார் தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா. அதிலும், பத்தாவது போட்டியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி, அதிலும் கேப்டனாக வெற்றி தேடிக் கொடுத்திருக்கிறார் பவுமா. கடந்த நூறாண்டுகளில் இந்த சாதனையை வேறு யாரும் செய்ததில்லை.
டெம்பா பவுமா அதிகபட்சமாக 10 போட்டிகளில் 9 வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடன் தோல்வியடையாதவராக இருக்கிறார். இவர் பெர்சி சேப்மேனின் சாதனையை முறியடித்துள்ளார். பெர்சி சேப்மேன் தனது முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பெற்றிருந்தார்.

டெம்பா பவுமா 2023 முதல் 2025 வரை தென்னாப்பிரிக்க அணியை டெஸ்ட் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். டெஸ்ட் அணியின் கேப்டன் ஆனதிலிருந்து அவர் ஒன்பது வெற்றிகள் மற்றும் ஒரு டிராவை பெற்றுக்கொடுத்திருக்கிறார். இதில் உச்சகட்டமாக, அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை வென்றது வரலாற்று நிகழ்வாக அமைந்தது.
மேலும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா ஒரு ஐசிசி தொடரை வென்றிருக்கிறது. இதன் மூலம், இதுவரை தோல்வியை சந்திக்காத கேப்டன் என்ற பெருமையையும் டெம்பா பவுமா பெற்றுள்ளார்.
இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 207 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது. அந்த சவாலான இலக்கை தென்னாப்பிரிக்கா அணி துரத்தி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் எய்டன் மார்க்ரம் 136 ரன்களையும், டெம்பா பவுமா 66 ரன்களையும் சேர்த்திருந்தனர்.