
பரிசோதனை நடத்தப்பட்டது
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்ல கடந்த சில வாரங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்தது. அவர்கள் ஜூன் 28 அன்று இங்கிலாந்து கிளம்ப இருந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.

பாதிப்பு உறுதி
அதில் திங்கள்கிழமை அன்று நடந்த பரிசோதனையில் 3 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. செவ்வாய் அன்று மேலும் 7 வீரர்கள் மற்றும் ஒரு உதவியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் கிரிக்கெட்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எங்குமே நடைபெறவில்லை. இங்கிலாந்து அணி முதல் முயற்சியாக தங்கள் நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

டெஸ்ட் தொடர்
அந்த தொடர் ஜூலை 8 அன்று தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத உள்ளது இங்கிலாந்து அணி.

பயிற்சி முகாம்
இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி தயாராகி வந்தது. பாகிஸ்தான் வீரர்களுக்கு சுமார் ஒரு மாத பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வந்தது. எனினும், பாகிஸ்தான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், பயிற்சியை ரத்து செய்து விரைவாக இங்கிலாந்து செல்லும் முயற்சி எடுக்கப்பட்டது.

தொடர் நடக்குமா?
அதன் ஒரு பகுதியாக வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு, 10 வீரர்களுக்கு அதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பாகிஸ்தான் வீரர்கள் குழு இங்கிலாந்து செல்ல இருந்த நிலையில் அதில் 10 பேருக்கு பாதிப்பு இருப்பதால் இந்த தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

உறுதியாக உள்ளது
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை நடத்த உறுதியாக உள்ளது. டெஸ்ட் அணியில் ஆட வேண்டிய முக்கிய வீரர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதால் மீதமுள்ள வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து அனுப்ப முடிவு செய்துள்ளது.

மீண்டும் பரிசோதனை
அனைத்து வீரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பயிற்சி முகாமுக்கு முன்பே ஏன் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பயிற்சி முகாம் காரணமா?
ஏற்கனவே, 10 வீரர்களுக்கு பயிற்சி முகாம் மூலமே பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. அப்படி என்றால் மற்ற வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. இன்னும், சோயப் மாலிக், பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோரது பரிசோதனை முடிவுகள் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications