மும்பை: இதோ வந்து விட்டது முறைப்படியான அறிவிப்பு... இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இந்த மூன்று ஜாம்பவான்களும் இணைந்திருப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தாக்கூர் வெளியிட்டுள்ள டிவிட்டில், இந்த நாளை சிறப்பாக ஆரம்பித்துள்ளோம். கிரிக்கெட் வாரிய ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் இணைந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
இன்னொரு டிவிட்டில், சச்சின், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோருக்கு நன்றி, வரவேற்பு. உங்களது ஆலோசனையும், ஆதரவும் கிரிக்கெட் வாரியத்திற்குக் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இதை உறுதிப்படுத்தி டிவிட் போட்டுள்ளனர்.
பல வருடமாக இந்திய அணிக்காக ஆடியவர்கள் இந்த மூன்று பேரும். குறிப்பாக டெண்டுல்கர்தான் இதில் ரொம்ப சீனியர். 20 வருடங்களுக்கு மேல் ஆடாமல், அசையாமல் நின்று ஆடியவர் அவர்.
இவர்களின் நியமனத்தை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா செய்துள்ளார். உடனடியாக இந்த நியமனம் அமலுக்கு வருகிறது. இந்த நியமனத்தை மூன்று முன்னாள் வீரர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்திய அணி தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கும் இந்த மூவர் குழு வாரியத்திற்கு ஆலோசனைகள் வழங்கும்.
அணியின் சுற்றுப்பயணங்கள், உத்திகள், வீரர்கள் தேர்வு என அனைத்திலும் அவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
பிசிசிஐ, சச்சின், கங்குலி, லக்ஷ்மன்.. அடடா.. நான்கு பெயரும் நான்கு எழுத்துக்களில் உள்ளதே.. அடடா!
அது சரி, டிராவிட்.. இதுவும் கூட நான்கு எழுத்தில்தான் உள்ளது. இந்தப் பெயரை மறந்து விட்டதே பிசிசிஐ.. ஒரு வேளைக்கு அதுக்கும் மேல என்று கூறி ஏதாவது பெரிய கிப்ட் தரப் போகிறார்களோ....?