பெங்களூரு: அமெரி்க்காவில் உள்ள பிரபலமான பேஸ்பால் மைதானங்களில் சச்சின் டெண்டுல்கர் - வார்னே இணைந்து நடத்தப் போகும் ஆல் ஸ்டார் டுவென்டி 20 போட்டிகள் நடைபெறவுள்ளன.
பிரபலமான நியூயார்க் யாங்கி ஸ்டேடியமும் அதில் ஒன்றாகும். இதை ஷான் வார்னே உறுதிப்படுத்தியுள்ளார்.

வார்னேவும், சச்சினும் சேர்ந்து முன்னாள் வீரர்களுக்கான டுவென்டி 20 லீக் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இது அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்தத் தொடரை அமெரி்க்காவில் இந்த முறை காட்சிப் போட்டிகள் போல நடத்தவுள்ளனர்.
அதை அமெரிக்காவில் உள்ள பிரபலமான பேஸ்பால் ஸ்டேடியத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 3 பேஸ்பாஸ் ஸ்டேடியங்களை வார்னே புக் செய்துள்ளார். இதை அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வார்னே கூறுகையில் இப்போதைக்கு 3 ஸ்டேடியங்கள் புக் ஆகியுள்ளன. சிகாகோ ரிக்லி பீல்ட், நியூயார்க் யாங்கி ஸ்டேடியம், லாஸ் ஏஞ்சலெஸ் டாட்சர் ஸ்டேடியம் ஆகியவை புக் ஆகியுள்ளன.
நாங்கள் பாலிவுட் தீம் இரவுகளையும் நடத்தப் போகிறோம். அனைத்தும் நல்லபடியாக நடந்து வருகின்றன. பார்முலா ஒன் டீம் போல நாங்கள் பக்கவாக தயாராகி வருகிறோம்.
அமெரிக்காவுக்கு ஏன் கிரிக்கெட்டை எடுத்துச் செல்லக் கூடாது என்று நானும், சச்சினும் யோசித்தோம். உலகம் முழுவதும் கிரிக்கெட்டை எடுத்துச் செல்லவும் யோசித்தோம். அதன் விளைவே இது. பள்ளிகள் அளவில் கிரிக்கெட்டை கொண்டு செல்லப் போகிறோம்.
இதுவரை 28 வீரர்கள் புக் ஆகியுள்ளனர். ராகுல் டிராவிட், மெக்கிராத், கல்லிஸ், கில்கிறைஸ்ட், கங்குலி, லாரா, லட்சுமண், வாசிம் அக்ரம் ஆகியோர் அதில் சிலர்.
கடந்த 20 ஆண்டுகளில் யாரையெல்லாம் ரசிகர்கள் ரசித்தார்களோ அவர்களையெல்லாம் இதில் கொண்டு வரப் போகிறோம். கிட்டத்தட்ட அனைவருமே இதில் வந்து இணைந்துள்ளனர். அனைவரையும் ஒரே இடத்தில் ரசிகர்கள் ரசித்துப் பார்க்கலாம் என்றார் வார்னே.
சமீபத்தில் இந்தத் தொடருக்கு அனுமதி வாங்குவது தொடர்பாக ஐசிசி நிர்வாகிகளையும், சச்சினும், வார்னேவும் சந்தித்துப் பேசினர்.
இதுபோக, சமீபத்தில் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் என்ற பெயரில் ஒரு புதிய ஆல் ஸ்டார் லீக் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் லாரா, கில்கிறைஸ்ட், அக்ரம், கல்லிஸ் ஆகியோர் ஐகான் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இது அடுத்த ஆண்டு தொடங்குகிறது.