ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் இன்று கடைசி 2 இடங்களை பிடித்த ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் பில் சால்ட், டக் அவுட்டாக, ஒரு பக்கம் டேவிட் பொறுமையாக விளையாடினார்.
மிட்செல் மார்ஷ் 5 பவுண்டரிகளை அடித்து ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். எனினும் அவர் 15 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். ஆட்டத்தின் 7வது ஓவரில் டெல்லி அணியின் முக்கிய வீரர்களான வார்னர், சர்பிராஸ் கான், ஹக்கீம் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

அக்சர் பட்டேலும், மணிஷ் பாண்டேவும் தலா 34 ரன்களை எடுக்க, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 144 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில் வாய் கொழுப்பு வீரர் ஹாரி புருக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய மாயங் அகர்வலால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. எனினும் 49 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 5 ரன்களிலும், கேப்டன் ஏய்டன் மார்க்கரம் 3 ரன்களிலும் வெளியேற ஐதராபாத் அணி 85 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
கடைசி 5 ஓவரில் ஐதராபாத் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது வாசிங்டன் சுந்தரும், கிளாசெனும் அதிரடியாக விளையாடி மீண்டும் ஐதராபாத் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தனர். 17வது ஓவரில் 13 ரன்களும், 18வது ஓவரில் 15 ரன்களும் அடிக்க ஐதராபாத் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது 19 பந்துகளில் 31 ரன்கள் அடித்த கிளாசென் ஆட்டமிழக்க மீண்டும் ஆட்டத்தில் டிவிஸ்ட் ஏற்பட்டது. எனினும் வாசிங்டன் சுந்தரின் ஒரு பவுண்டரியால் அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. இதனையடுத்து கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட, முதல் 3 பந்துகளில் முகேஷ் குமார் 3 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். 3 பந்துக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரசிகர்கள் சீட்டு நுணிக்குள் வந்தனர்.
வீரர்கள் இருக்கையில் இருந்த மெண்டர் கங்குலி வீரர்களை இப்படி நிறுத்துங்க என்று அறிவுரை வழங்கியே இருந்தார். எனினும் முகேஷ் குமார் யாக்கர்களை வீசி கடைசி 3 பந்தில் 2 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இதனால் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் முகேஷ் குமார் 5 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.