முக்கிய பௌலர் புவனேஸ்வர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரின் முக்கிய பௌலராக அமைந்துள்ளார் புவனேஸ்வர் குமார். கடந்த இரு வருடங்களாக காயங்களால் தொடர்ந்து அவதியுற்ற அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முக்கிய இலக்கு
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தன்னுடைய முக்கிய இலக்கு என்று புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னுடைய பயிற்சிகள் அனைத்தையும் டெஸ்ட் போட்டிகளை மனதில் கொண்டே தான் மேற்கொள்வதாகவும் டெஸ்ட் போட்டிகளுக்கு வேறு வகையில் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகள் முக்கியம்
அடுத்ததாக ஐபிஎல்லிற்காக தான் சிறப்பாக தயாராக உள்ளதாகவும் இதனிடையே தன்னுடைய பணிகள் மற்றும் பயிற்சிகளை தான் டெஸ்ட் போட்டிகளை மனதில் வைத்து மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்ததாக டெஸ்ட் போட்டிகள் அதிகளவில் நடைபெறவுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
புவனேஸ்வர் குமார் உறுதி
ஆயினும் அதிகமான திட்டங்களை தான் மேற்கொள்ளவில்லை என்றும், முன்னதாக தான் திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் காயங்கள் காரணமாக நடைபெறாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகமான காலம் தான் பிட்னஸ் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது பிட்னசுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.