பலிதமாகும் கங்குலியின் முயற்சி
இந்தியாவில் முதல் முறையாக நடைபெறவுள்ள இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியின் ஆர்க்கிடெக்ட்டாக உள்ளார் சவுரவ் கங்குலி. பல்வேறு தரப்பிலும் சிறு தயக்கம் இருந்தாலும், இந்த போட்டியை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளார் கங்குலி
ரசிகர்கள் மிகுந்த ஆர்வம்
பகலிரவு போட்டியை நடத்துவது என்பது மிகவும் கடினமானது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆயினும் ரசிகர்கள் இந்த போட்டிகளை காண்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அனைத்து டிக்கெட்டுகளும் விற்றால் திருப்தி
டெஸ்ட் மேட்ச்களை காண்பதற்கு ரசிகர்களை மைதானத்திற்கு மீண்டும் வரவழைப்பது என்பது மிகவும் சிரமமான செயல் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் 65 ஆயிரம் ரசிகர்கள் டிக்கெட்டுகளை முதல் 3 நாட்கள் போட்டியை காண வாங்கியுள்ளது திருப்தியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈடன் கார்டன் மைதானம் மகிழ்ச்சியால் நிரம்பும்
இந்த பகலிரவு போட்டியில் முதல் 3 நாட்களின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ள நிலையில், தன்னுடைய ஆட்டத்தை காண தன்னுடைய ரசிகர்கள் அனைவரும் மைதானத்திற்கு வருவதை கோலி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பார் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.
சவுரவ் கங்குலி கருத்து
5 நாட்கள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகளின் பழமை மற்றும் அதன் சுவாரஸ்யம் மாறாமல் அது புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
மாற்றம் ஏற்பட வேண்டும்
சர்வதேச கிரிக்கெட்டின் முக்கிய மற்றும் வலிமையான அணியாக இந்தியா உள்ளது. இந்நிலையில், இங்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் மாற்றம் மிகவும் அத்தியாவசியமானது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது ஒருசில நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.