மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேலிடம் டோணி கூறியதும், உங்களுக்கு ஏதேனும் காயம் பட்டுள்ளதா என்பதுதான் பதில் கேள்வியாக இருந்ததாம்.
இதுகுறித்து சஞ்சய் பட்டேல், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

மெல்போர்ன் டெஸ்ட் போட்டி முடிந்ததும், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டோணி, நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறேன் என்று கூறினார்.
நான் அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டுள்ளது போலும் என்று நினைத்து, காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்று கேட்டேன். அவர் அமைதியாக "நன்மைக்காகவே ஓய்வு முடிவு எடுக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதுதான் உங்கள் இறுதி முடிவா என்று நான் கேட்டேன். அதற்கு, சக வீரர்களிடம் இந்த முடிவை கூறிய பிறகு, அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள் என்று டோணி என்னிடம் கூறினார். இதன் நடுவே நான், தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் மற்றும் சிவலால் யாதவுக்கு இத்தகவலை தெரிவித்தேன். இருவருமே, டோணியின் விருப்பத்தை மதித்து நடப்பதுதான் நல்லது என்று தெரிவித்தனர். நானும் அதே எண்ணத்தில்தான் இருந்தேன்.
எனவே டோணி மீண்டும் அழைத்தபோது, அவரது முடிவுக்கு குறுக்கே நிற்கப்போவதில்லை என்று கூறிவிட்டேன். டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன்பே ஓய்வு பெறும் யோசனையை டோணி கூறியிருந்தார். மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் அவர் ஒருவரே கேப்டனாக இருப்பதால் ஏற்பட்ட சுமையை உணர ஆரம்பித்ததால் அந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.
அதே நேரம் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டனாக டோணியே தொடருவார். அதில் சிறிதும் மாற்றமில்லை. இவ்வாறு சஞ்சய் பட்டேல் கூறியுள்ளார்.