டல்லாஸ்: வாஷிங்டன் பிரீடம் அணிக்கு எதிரான போட்டியில் டெக்ஸாஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ 6 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உட்பட 39 பந்துகளில் 76 ரன்கள் குவித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 5வது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து வாஷிங்டன் பிரீடம் அணி களமிறங்கியது. வாஷிங்டன் அணி ஆடிய முதல் போட்டியில் சியாட்டல் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் இந்தப் போட்டியில் வெற்றிபெற கட்டாயத்தில் வாஷிங்டன் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற வாஷிங்டன் அணி கேப்டன் ஹென்ரிக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின்னர் மேத்யூ ஷார்ட் - கோஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. அதில் கோஸ் 7 ரன்களிலும், முக்தார் அஹ்மத் 20 ரன்களிலும், கிளென் பிலிப்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய மேத்யூ ஷார்ட் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய அவர் 10 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 50 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக வாஷிங்டன் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 164 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே சோகமாக மாறியது. தொடக்க வீரர் கான்வே ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் டூ பிளஸிஸ் 14 ரன்களிலும், மில்லர் 14 ரன்களிலும், மிலிந்த் குமார் 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறியது. இந்த நிலையில் சான்ட்னர் - பிராவோ இணை சேர்ந்தது.

தொடக்கத்தில் நிதானம் காட்டிய பிராவோ 18 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பின்னர் சான்ட்னரும் ஆட்டமிழக்க, பிராவோ தனது பீஸ்ட் மோடுக்கு வந்தார். அடுத்த 20 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதனால் மைதானத்தில் குவிந்திருந்த டிஎஸ்கே ரசிகர்கள் மிரண்டு போயினர். குறிப்பாக நார்கியே வீசிய 10 பந்துகளில் 35 ரன்களை பிராவோ விளாசினார். இறுதிவரை ஆடிய பிராவோ 39 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.
கடைசி ஓவரில் 27 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், 21 ரன்களை மட்டுமே டிஎஸ்கே அணி எடுத்தது. இதனால் வாஷிங்டன் ப்ரீடம் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இருப்பினும் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பிராவோ, 39 வயதிலும் வெற்றிக்காக போராடியது சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.