டல்லாஸ்: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
அமெரிக்கா மக்களிடையே நாளுக்கு நாள் கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனை மேலும் அதிகரிக்க மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் தொடங்கப்பட்டுள்ளது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த எம்எல்சி தொடரில் டெக்ஸால் சூப்பர் கிங்ஸ், மும்பை நியூ யார்க், சியாட்டல் ஆர்பாஸ், லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் என்று ஐபிஎல் உரிமையாளர்கள் 4 அணிகளில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த எம்எல்சி லீக் தொடரின் முதல் போட்டியில் டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற எல்ஏகேஆர் அணியின் கேப்டன் சுனில் நரைன் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் டிஎஸ்கே அணி சார்பாக கான்வே - டூ பிளஸிஸ் கூட்டணி களமிறங்கியது. இதில் டூ பிளஸிஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் சிறப்பாக ஆடிய டெவான் கான்வே 37 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து வந்த மில்லர் 42 பந்துகளில் 61 ரன்கள் குவிக்க, கடைசி நேரத்தில் வந்த சான்ட்னர் 14 பந்துகளில் 21 ரன்களும், பிராவோ 6 பந்துகளில் 16ரன்கள் விளாசினர். இதனால் டிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் லாக்கி ஃபெர்குசன் மற்றும் அலி கான் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. அந்த அணியின் கப்தில், நிதிஷ் குமார் டக் அவுட்டிலும், உன்முக்த் சந்த், ரைலி ரூஸோவ் தலா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ரஸல் - மல்ஹோத்ரா இணை சிறிது தாக்கு பிடித்தது. சிறப்பாக ஆடிய ரஸல் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் பிராவோ பந்தில் அவர் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் சீட்டுக்கட்டை போல் சரிந்தனர்.
இதனால் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. டிஎஸ்கே அணி தரப்பில் முகமது மோசின் 4 விக்கெட்டுகளையும்,. தெரோன் மற்றும் கொயட்சே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் டிஎஸ்கே அணி எம்எல்சி தொடரில் முதல் வெற்றியை பெற்றது. இந்த ஆட்டம் நடைபெற்ற மைதானத்தில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் மொத்தமாக குவிந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.