அடிலெய்ட்: ஆசஸ் 2025 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் அசஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி மீண்டும் கைப்பற்றி இருக்கிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றது. இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் இன்னிங்ஸில் அந்த அணி 371 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 85 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக விளையாடிய டிராவிஸ் ஹெட் 170 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அந்த அணி 349 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதை அடுத்து 435 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்கள் கட்டுக்கோப்பாக விளையாடினர். பென் டக்கட் நான்கு ரன்களில் ஆட்டம் இழக்க, ஆலி போப் 17 ரன்களில் வெளியேறினார்.
சிறப்பாக விளையாடிய ஜாக் கிராலி 85 ரன்கள் எடுத்தார். இதைப்போன்று ஜோ ரூட் 39 ரன்களும், ஹாரி புரூக் 30 ரன்கள் எடுத்தார் .பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் வெளியேறினார். இந்த சூழலில் ஜெமி ஸ்மித் 62 ரன்கள் எடுக்க பிரைடல் கர்ஸ் 39 ரன்கள் எடுத்தார். எனினும் மற்ற வீரர்கள் துணை நிற்காததால் இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்ஸில் 352 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் சதம் இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்கள் மற்றும் ஆறு கேட்ச்களை பிடித்த ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் காரி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதை அடுத்து நான்காவது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே அன்று டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது.