பெர்த்: பாரம்பரியமிக்க ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி பெர்த் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் முதல் இன்னிங்சில் தடுமாறியது.
இதன் காரணமாக முதல் நாளில் மட்டும் 19 விக்கெட்டுகள் விழுந்தன. இந்த நிலையில் இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸிலும் கடுமையாக தடுமாறி 164 ரன்களில் சுருண்டது.

இதனை அடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய இந்த இலக்கை தட்டு தடுமாறி தான் எடுக்கும் என்று எதிர்பார்த்தனர். இதனால் போட்டி மூன்றாவது நாள் வரை செல்லும் என எதிர்பார்த்த ரசிகர்கள் சுமார் 60,000 டிக்கெட்டுகளை வாங்கி இருந்தார்கள். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி போட்டியை இரண்டாவது நாளில் முடித்து விட்டது.
இன்னும் சொல்லப் போனால் 205 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி வெறும் 28.2 ஓவர்கள் எட்டியது. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹெட் 69 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். 83 பந்துகளை எதிர் கொண்ட அவர் 123 ரன்கள் சேர்த்தார். இதில் 16 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் அடங்கும்.
அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 148 என்ற அளவில் இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த டிராவிஸ் ஹெட், மூன்றாவது நாள் போட்டிக்கு 60 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக நான் அறிந்தேன். தற்போது போட்டி முன்பே முடிவடைந்ததால் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். கிரிக்கெட் அளவில் இது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டாலும் வருமான அளவில் பெரும் சரிவை ஆஸ்திரேலியா சந்தித்திருக்கிறது.
போட்டிக்கான மூன்றாவது மற்றும் நான்காவது நாள் மாற்றத்திற்கு சுமார் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருந்தது. இதன் மூலம் டிக்கெட் மூலமாகவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 17 கோடி ரூபாய் கிடைத்திருக்க வேண்டியது. தற்போது போட்டி இரண்டாவது நாளில் முடிவடைந்து விட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பணத்தை திருப்பி தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகள் ஐந்து நாட்களுக்கு முன்பே முடிவடைவதன் மூலம் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் பல கோடி நஷ்டத்தை சந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.