பிரிஸ்பேன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது, இங்கிலாந்து அணிக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.
முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்த இங்கிலாந்து, இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அணியின் முதல் இன்னிங்ஸில் ஜாக் கிரௌலி 76 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 138 ரன்களும் எடுக்க, இங்கிலாந்து அணி மொத்தம் 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் மிட்சல் ஸ்டார்க் அசத்தி, 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதில் அளித்த ஆஸ்திரேலியா, பேட்டிங்கில் மிரட்டி முதல் இன்னிங்ஸில் 511 ரன்களைக் குவித்தது. ஜாக் வெதரால்டு 72, மார்னஸ் லபுசேன் 65, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 61, கேமரூன் கிரீன் 45, அலெக்ஸ் கேரி 63, மற்றும் மிட்சல் ஸ்டார்க் 77 ரன்கள் எனப் பலரும் சிறப்பாகப் பங்களித்தனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
177 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால், இந்த இன்னிங்ஸிலும் அவர்களால் பெரிய ரன் குவிக்க முடியவில்லை. ஜாக் கிரௌலி 41, வில் ஜேக்ஸ் 44, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 50 ரன்கள் எனப் பங்களித்த நிலையில், இங்கிலாந்து 241 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நேசர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார், அவர்களுக்கு இலக்காக 65 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
வெறும் 65 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, ட்ராவிஸ் ஹெட் 22, மார்னஸ் லபுசேன் 3 ரன்களில் ஆட்டமிழக்க, சற்று தடுமாறியது. இருப்பினும், ஜாக் வெதரால்டு 17* ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 23* ரன்களுடனும் நிலைத்து நின்று, இலக்கை பத்து ஓவர்களில் எட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தனர். இதனால் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது. எனினும், இந்த அணுகுமுறை அவர்களுக்கு வெற்றிகளை விட அதிக தோல்விகளையே பெற்றுத் தருகிறது. மரபுசார்ந்த டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டமுறைக்குத் திரும்பாமல், இங்கிலாந்து தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள முன்வராதது, இந்த போட்டியிலும் பின்னடைவை ஏற்படுத்தியது.