பெர்த்: ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வியை தழுவியது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக பெர்த்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இங்கிலாந்து நிர்ணயித்த 205 என்ற இலக்கை ஆஸ்திரேலியா எளிதில் எட்டியது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இதில் இங்கிலாந்து மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய ஸ்கோரை சேர்த்திருந்தால், நிச்சயம் அது ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியை தந்திருக்கும். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் கண்டபடி பேட்டை சுற்றி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
குறிப்பாக அந்த அணியில் நட்சத்திர வீரரான ஜோ ரூட் வெறும் 800 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். முதல் இன்னிங்சிலும் அவர் டக் அவுட் ஆனார். ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13351 ரன்கள் அடித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்கு பிறகு அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.
இந்த நிலையில் ஜோ ரூட்டின் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் கடுமையாக சாடியிருக்கிறார். இது குறித்து நேரலையில் பேசிய அவர், அறிவு என்பதை இல்லாமல் பேஸ் பால் என்று ஒன்றை விளையாடுகிறார்கள். பேட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் வீரர்கள் கண்டபடி பேட்டை சுற்றுகிறார்கள்.
போட்டியில் கொஞ்சம் புத்திசாலித்தனம் வேண்டும். ஆனால் இங்கிலாந்து செய்வது புத்திசாலித்தனமே கிடையாது. அதுவும் பத்தாயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் ஒரு வீரர் முட்டாள்தனமாக விளையாடுகிறார். ஒன்றுமே இல்லாத விஷயத்தில் ஏதேனும் செய்து எதையோ உருவாக்க விரும்புகிறார்கள். இந்த போட்டியில் இங்கிலாந்து தான் முன்னிலையில் இருந்தது.
ஆனால் தற்போது மோசமாக விளையாடி ஆட்டத்தையே அவர்கள் இழந்து விட்டார்கள் என்று வார்னர் கூறியுள்ளார்.