பெர்த்: ஆசஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 205 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி மிகவும் எளிதில் எட்டி அசத்தியது. குறிப்பாக அந்த அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் 69 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ், உண்மையில் நான் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கின்றேன்.

பிரமாதமான ஒரு ஆட்டத்தை ஹெட் விளையாடிவிட்டு சென்றுவிட்டார். அவருடைய ஆட்டம் உணர்ச்சிவசமாகவும், அபாரமாகவும் இருந்தது. இது உண்மையிலேயே ஒரு சிறந்த ஆட்டம். அவர் தைரியமாக நின்று போட்டியை எங்களிடம் இருந்து கவர்ந்து சென்று விட்டார். இது போன்ற கட்டத்தில் இருக்கும் போது இப்படி தான் முயற்சி செய்து அதிரடியை காட்ட வேண்டும்.
எங்களை ஊதி தள்ளி விட்டு சென்று விட்டார். எங்கள் பௌலர்களை அடித்து நொறுக்கி விட்டார். இதன் மூலம் உலகின் சிறந்த பவுலர்கள் கூட கடும் நெருக்கடியை சந்தித்தார்கள். நாங்கள் மூன்று அல்லது நான்கு வித்தியாசமான திட்டங்களை அவருக்கு பயன்படுத்த முயற்சி செய்தோம். ஆனால் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் போல் வேகமாக வந்து எங்களை அடித்து சென்று விட்டார்.
அவரை தடுத்து நிறுத்தவே கடினமாக இருந்தது. நாங்கள் முதல் நாளில் பந்து வீசிய விதம் மிகவும் சிறப்பானது. முதல் நாளில் பல விஷயங்கள் நடந்தது. பவுலர்களுக்கு உண்மையிலேயே அது சிறந்த தினம். ஆனால் இந்த போட்டி முடிவு எனக்கு மிகவும் கடினமாக இருக்கின்றது. ஏனென்றால் இந்த போட்டியை நாங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.
ஆனால் பரவாயில்லை, இன்னும் நான்கு போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தற்போது அதிக நாட்கள் எஞ்சி இருக்கிறது. அங்கு சென்று வெற்றி பெறுவது எப்படி என முயற்சி செய்வோம் என்று பென் ஸ்டோக்ஸ் கூறினார். இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் நான்காம் தேதி பிரிஸ்பேனில் பகல் இரவு ஆட்டமாக நடக்கிறது.