பெர்த்: பாரம்பரியமிக்க ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை வெள்ளிக்கிழமை பெர்த் நகரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை வென்று சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி களம் இறங்கியுள்ளது.
கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2010- 11ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசஸ் கோப்பையை தான் இங்கிலாந்து அணி வென்றது. அதன் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி ஆசஸ் தொடரை வெல்லவில்லை. இன்னும் சொல்ல போனால், ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு போட்டியில் கூட வெற்றியை ருசிக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் இரண்டாம் உலக போருக்கு பிறகு வெறும் ஐந்து இங்கிலாந்து அணிகள் தான் ஆசஸ் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் வென்றிருக்கிறது. கடந்த முறை 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆசஸ் கோப்பையை இரு அணிகளும் தலா இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
அது மட்டும் இல்லாமல் ஆசஸ் கோப்பையை இங்கிலாந்து அணி 2015 ஆம் ஆண்டு தங்களது சொந்த மண்ணில் கடைசியாக வென்றது. அதன் பிறகு ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைத்திருக்கிறது. இதனால் ஆசஸ் கோப்பையை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இங்கிலாந்து அணி கேப்டன் உள்ளார்.
இது குறித்து பேசிய அவர் அனைத்து கிரிக்கெட் தொடர்களையும் விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆசஸ் தொடர் தான் என்று எனக்கு தெரியும். கடந்த முறை நாங்கள் இங்கு வந்த போது எங்கள் அணியில் யார் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்களோ அவர்களை வைத்துதான் விளையாடினோம்.இல்லையென்றால் அப்போதே நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். நான் இந்த தொடரில் ஒரு முழு ஆல்ரவுண்டராக களமிறங்க இங்கு வந்துள்ளேன்.
என்னுடைய பணியை முழுமையாக செய்ய நான் கடுமையாக உழைத்து இருக்கின்றேன். இதன் மூலம் நான் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவேன் என்று எனக்கு நன்றாக தெரியும்.நாங்கள் எங்களுடைய அணியை தான் கவனம் செலுத்துகின்றோம். எதிரணி குறித்து பெரிய கவனம் செலுத்தவில்லை. ஆசஸ் கோப்பையை வென்று சாதனை படைக்க இங்கு நாங்கள் வந்துள்ளோம். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபடுவோம் என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.