பெர்த்: பாரம்பரியமிக்க ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆசஸ் தொடரில் பங்கு பெற்றுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இங்கிலாந்து அணி வெற்றி பெறாததால், இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆட்டத்தின் முதல் ஓவரிலே ஜாக் கிராலி டக் அவுட்டானார். இதை அடுத்து பென் டக்கட் மற்றும் ஆலி போப் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். ஆனால் மிட்செல் ஸ்டார்க் தன்னுடைய மேஜிக் பந்துவீச்சை வெளிப்படுத்தி பென் டக்கட்டை ஆட்டம் இழக்க வைத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் டக் அவுட்டானார்.
அபாரமாக விளையாடிய ஆலி போப் 46 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தற்போது 23 ஓவர் முடிவில் முதல் நாள் மதிய உணவு நேர இடைவெளியின் போது இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருக்கிறது இதில் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும், கேமரான் கிரீன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.
ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ள நிலையில் இங்கிலாந்து வீரர்கள் தேவையில்லாமல் ஷார்ட் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தனர். கொஞ்சம் பொறுமை காத்திருந்தால் இங்கிலாந்து வீரர்கள் பெரிய ஸ்கோரை முதல் இன்னிங்ஸில் குவித்திருக்க முடியும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், கடந்த ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பெர்த் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஆனால் அதன்பின் கிட்டதட்ட 300(295) ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து எவ்வளவு அடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசி வருவதாகவும் ஆஸ்திரேலியா நல்ல தொடக்கத்தை பெற்றிருப்பதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.