பெர்த்: ஆசஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 205 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்த அணி நிர்ணயித்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் நேற்று தொடங்கியது.
பெர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது. இரண்டு அணி வீரர்களும் மோசமான கிரிக்கெட் ஷாட்களை ஆடினர். இதன் காரணமாக முதல் நாளில் மட்டுமே 19 விக்கெட்டுகள் பறிபோனது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 172 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 132 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து 40 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆவது இங்கிலாந்து வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய இலக்கை நிர்ணயிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் ஆஸ்திரேலிய அணியின் பவுலர்கள் விக்கெட் வேட்டையில் ஈடுபட்டனர்.
மீண்டும் முதல் ஓவரிலேயே இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி டக் அவுட்டாகி வெளியேறினார். ஆலி போப், டக்கட் ஜோடி கொஞ்சம் பொறுப்பாக விளையாடிய ரன்களை சேர்க்க முயற்சித்தனர். பென் டக்கட் 28 ரன்களிலும், ஆலி போப் 33 ரன்களிலும் ஆட்டம் இழக்க, முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் வெளியேறிய ஜோ ரூட், இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தபட்சம் அரைசதமாவது அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர் ஸ்டார்க் பந்துவீச்சில் 8 ரன்களில் கிளீன் போல்ட் ஆனார். இதேபோன்று தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி ஹாரி புரூக் டக் அவுட் ஆனார். கேப்டன் ஸ்டோக்ஸ் 2 ரன்களில் வெளியேற ஜெமி ஸ்மித் 15 ரன்கள் எடுத்தார். பவுலர்களான கஸ் அட்கின்சன் 32 பந்துகளை எதிர்கொண்டு 37 ரன்களும், பிரைடன் கார்ஸ் 20 ரன்களும் எடுத்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 34.4 ஓவர்கள் எதிர்கொண்டு 164 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும், ஸ்காட் போலந்து நான்கு விக்கெட்டுகளையும் பிராண்டன் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.இதனால் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கி உள்ளது. போட்டியின் இரண்டாவது நாளே முடிவு கிடைத்துவிடும் நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது.