பிரிஸ்பேன்: ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 0-2 என பின்தங்கியுள்ளது. இது குறித்து இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெஃப்ரி பாய்காட், இந்தத் தோல்வி குறித்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
85 வயதான பாய்காட், இங்கிலாந்து அணி பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு ஈடாக இல்லை என்று சுட்டிக்காட்டினார். முதல் டெஸ்ட் இரண்டு நாட்களிலும், இரண்டாவது டெஸ்ட் நான்கு நாட்களிலும் முடிவடைந்த நிலையில், வெறும் 6 நாட்களுக்குள் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறை கூறியுள்ளார்.

2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு சவால் விடுக்க முடியாமல் இங்கிலாந்து, தங்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 334 மற்றும் 241 ரன்களில் சுருண்டது. மறுபுறம், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்து, பின்னர் 65 ரன்கள் இலக்கை எட்டு விக்கெட்டுகள் மீதமிருக்க எட்டியது.
இது குறித்து பேசிய பாய்காட், "பிரிஸ்பேன் ஒரு திகில் நிறைந்த காட்சியாக இருந்தது: பொறுப்பற்ற பேட்டிங், மோசமான பந்துவீச்சு, மற்றும் தவறவிடப்பட்ட கேட்சுகள் மோசமாக இருந்தது. இந்த ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடிக்கும் வாய்ப்பு அங்கே இருந்தது. ஆனால், ஆறு நாட்கள் ஆஷஸ் கிரிக்கெட்டுக்குப் பிறகு, இங்கிலாந்துக்கு அதிசியம் தேவைப்படுகிறது."
"இங்கிலாந்து வெறும் பேசும் அணி, செயலில் இல்லை. இந்த வகையான பேட்டிங் மற்றும் பந்துவீச்சுடன், அவர்களால் ஆஷஸ் கோப்பை அல்ல, ஒரு முட்டை கோப்பையை கூட வெல்ல முடியாது. பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்திற்கு ஒரு திட்டம் இருப்பதாகவும், நான்கு ஆண்டுகளாக இந்த சுற்றுப்பயணத்திற்காகத் திட்டமிட்டுள்ளதாகவும், என்ன செய்ய போகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என்றும் கூறினார். இது ஒரு அயோக்கியத்தனம். ஸ்டோக்ஸோ அல்லது அவரது அணியினரோ சொல்வதை நம்மால் நம்ப முடியாது. அவர்கள் தங்கள் அணியைத் தவிர வேறு யாரையும் கேட்க விரும்பவில்லை."
"டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் மாறிவிட்டது என்றும், நவீன விளையாட்டு பற்றி அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இந்த அணியின் பிரச்சினைகளில் ஒன்று என்னவென்றால், அவர்களை யாரும் கண்டிப்பதில்லை. அவர்கள் அமர்ந்து என்ன வித்தியாசமாகச் செய்திருக்கலாம் என்று விவாதித்து இருக்கலாம் என்பதுதான்."
"ஆனால் எனக்கு என்ன தெரியும்? நான் ஒரு அனுபவமற்றவன். ஆஸ்திரேலியாவுக்கு நான்கு முறை சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, இரண்டு ஆஷஸ் தொடர்களை வென்று, மேலும் இரண்டைச் சமன் செய்தவன். தற்போதைய இங்கிலாந்து வீரர்கள் நீக்கப்படுவதற்குக்கூட பயப்படுவதில்லை. அதனால்தான், குறிப்பாக பேட்டிங்கில், அதே பழைய தவறுகளை மீண்டும் மீண்டும் பார்க்கிறோம்."