பெர்த்: பாரம்பரியமிக்க ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றியை பெற்றது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் முதல் நாளில் மட்டும் 19 விக்கெட்டுகள் விழுந்தன.
இரண்டாவது நாளில் 13 விக்கெட்டுகள் விழுந்தன. இந்த நிலையில் இங்கிலாந்து நிர்ணயித்த 205 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட், 83 பந்துகளில் 123 ரன்கள் விளாசினார். இதில் 16 பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் அடங்கும்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி பெற ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். இது குறித்து பேசிய அவர், கடந்த இரண்டு நாட்கள் நம்ப முடியாத அளவுக்கு கிரிக்கெட் சிறப்பாக இருந்தது. நேற்று இங்கிலாந்து அபாரமாக செயல்பட்டார்கள். போட்டியை அவர்கள் பக்கம் இழுத்துச் சென்றார்கள்.
இந்த போட்டியை தவற விட்டு விடக்கூடாது என்று எங்களுக்கு நன்றாக தெரியும். நான் இன்று செயல்பட்ட விதம் உண்மையிலே ஸ்பெஷலாக இருக்கிறது. என்ன நடந்தது என்று என்னால் முதலில் உணரவே முடியவில்லை. மிகவும் வேகமாக அனைத்தும் நடந்து முடிந்து விட்டது. நான் செய்த இந்த சாதனையை முதலில் நான் அனுபவிக்க இன்னும் சில நேரம் ஆகும் என்று நினைக்கின்றேன்.
இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இங்கிலாந்து அணி ஷார்ட் பால்களை அதிகம் வீசப் போகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதற்கு ஏற்ற வகையில் நாங்கள் பயிற்சிகளை மேற்கொண்டோம். அணியின் பயிற்சியாளர் உள்ளிட்டோர் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். நான் தொடக்க வீரராக களம் இறங்கிய முடிவு பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உடையது தான்.
சில சீனியர் வீரர்களும் இந்த முடிவுக்கு பின்னால் இருந்தார்கள். நாங்கள் எங்களுடைய திட்டத்தை நம்பி விளையாடினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது. நல்ல முறையில் தற்போது தொடரை நாங்கள் தொடங்கி இருக்கின்றோம். அடுத்தது பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றோம். முதல் நாள் எங்களுக்கு சிறப்பானதாக இல்லை. ஆனால் இன்று நாங்கள் அபாரமாக விளையாடி இருக்கின்றோம்.
மூன்றாவது நாள் டெஸ்ட் போட்டிக்கு 60,000 ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் போட்டி இன்றே முடிவடைந்ததை நினைத்து நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன். முதல் 20 பந்துகளில் இங்கிலாந்து வீரர்கள் என்னை கடுமையாக சோதித்தார்கள். அதன் பிறகு உத்வேகம் எனக்கு கிடைத்தவுடன் நான் அதை பயன்படுத்திக் கொண்டு நன்றாக விளையாடினேன்.இதே மைதானத்தில் நான் கடந்த சில முறை 90 ரன்களில் ஆட்டம் இழந்தேன். தற்போது சதம் அடித்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது என்று டிராவிஸ் ஹெட் கூறினார்.