லண்டன் : பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இம்முறை எல்லை மீறி செல்வது கிரிக்கெட் வல்லுனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் விளையாட்டை தாண்டி இரு நாட்டுக்கு இடையிலான மான பிரச்சனை போல் ஆகிவிட்டது.
இரு நாட்டுப் பிரதமரும் ஒருவரை ஒருவர் சந்தித்த போது ஆஷஸ் டெஸ்ட் தொடரை இருவரும் கிண்டல் செய்து கொண்டனர். அந்த அளவிற்கு இரு நாடுகளிலும் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் பேரிஸ்டோவை ஓவர் முடிந்தும் அலெக்ஸ் காரி ரன் அவுட் ஆக்கியதுதான் இந்த மோதலுக்கு காரணமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். லண்டன் லார்ட்ஸ் மைதானத்திலேயே ஆஸ்திரேலிய வீரர்கள் மீது இங்கிலாந்து ரசிகர்கள் தாக்குதல் நடத்த முயன்றனர்.
மேலும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியின் அருகே இருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இதனால் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ள நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் இங்கிலாந்து அணி முதலில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் முதல் இன்னிங்சில் களம் இறங்கி விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் ஆஸ்திரேலியா அணி எடுத்திருந்தது.
இதனை அடுத்து ரிக்கி பாண்டிங் மைதானத்தில் பேட்டி கொடுத்திருந்தார். அப்போது இங்கிலாந்து ரசிகர்கள் அவர் மீது திராட்சை பழத்தை தூக்கி எறிந்து தாக்குதல் நடத்தினர். இது ரிக்கி பாண்டிங் மீது பட்டது. இதனால் கடுப்பான ரிக்கி பாண்டிங்,என்னை ரசிகர்கள் திராட்சையை வைத்து அடித்திருக்கிறார்கள். இதை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நேரலை கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இங்கிலாந்து ரசிகர்கள் எல்லை மீறி செயல்படுவதாக ஆஸ்திரேலியா ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.