லண்டன்: இந்திய அணிக்கு எதிராகவே நாங்கள் சீண்டல் வேலைகளை செய்தோம் என ஆஸ்திரேலிய அணிக்கு "வார்னிங்" கொடுத்துள்ளார் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி. கிரிக்கெட் உலகின் மிக பாரம்பரியமான தொடர்களில் ஒன்றான ஆஷஸ் தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் உள்ள நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இப்போதே வார்த்தைப் மோதல் எழத் தொடங்கிவிட்டது. அந்த வார்த்தை மோதலில் தான் இந்தியாவை வம்பிழுத்து இருக்கிறார் கிராலி.
"நாங்கள் இனி டெஸ்ட் கிரிக்கெட்டின் 'நல்ல பையன்கள்' அல்ல; அதன் டிரெய்லரை இந்தியத் தொடரிலேயே காட்டிவிட்டோம்," என்று இங்கிலாந்துத் தொடக்க வீரர் ஜாக் கிராலி, ஆஸ்திரேலியாவுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2025-26 ஆஷஸ் தொடர், வரும் நவம்பர் 21 அன்று பெர்த்தில் தொடங்குகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் தொடரை வெல்ல முடியாமல் இங்கிலாந்து தவித்து வருகிறது. இந்த முறை, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூட்டணியின் 'பேஸ்பால்' (Bazball) எனப்படும் ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

'தி டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜாக் கிராலி, ஆஸ்திரேலிய அணியைச் சீண்டும் வகையில் பேசியுள்ளார். "எங்களின் 'பேஸ்பால்' ஆட்டம் உண்மையிலேயே உங்களைக் கடுப்பேற்றுகிறது, இல்லையா? அது எங்களுக்கு நல்லதுதான். நீங்கள் எவ்வளவு கோபப்படுகிறீர்களோ, அது எங்களுக்கு அவ்வளவு சாதகம்" என்று அவர் கூறியுள்ளார்.
2023-ல் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அந்தத் தொடரில், லார்ட்ஸ் மைதானத்தில் ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சைக்குரிய விக்கெட் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதுகுறித்து பேசிய கிராலி, "பேர்ஸ்டோவ் விக்கெட்டுக்குப் பிறகு, 'தார்மீக ஆஷஸ்' என்றெல்லாம் அவர்கள் பேசியது, நாங்கள் தொடரைச் சமன் செய்ததால் ஏற்பட்ட விரக்தியின் விளைவு. எனவே, அவர்கள் அப்படிப் பேசியதே எங்களுக்குக் கிடைத்த ஒரு பாராட்டுதான்" என்று குறிப்பிட்டார்.
தனது எச்சரிக்கையின் முக்கியப் பகுதியாக, சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை கிராலி சுட்டிக்காட்டினார். "யாராவது எங்களைத் தள்ளிவிட்டால், மற்றொரு கன்னத்தைக் காட்டும் 'நல்ல பையன்களாக' நாங்கள் இனி இருக்க மாட்டோம் என்பதை இந்தியத் தொடரில் நிரூபித்துக் காட்டினோம்" என்று அவர் தெரிவித்தார்.
அந்தத் தொடரின்போது, சுப்மன் கில் போன்ற இந்திய வீரர்களுடன் இங்கிலாந்து வீரர்கள் களத்தில் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டினார். "ஆஸ்திரேலியர்கள் களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள்; உங்களை அடக்கி ஆள நினைப்பார்கள். எனவே, அவர்களுக்கு எதிராக நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும். நாங்கள் எளிதில் பணிந்துபோகும் அணி அல்ல என்பதை இந்தியாவுக்கு எதிராகக் காட்டிவிட்டோம். ஆஸ்திரேலியாவிலும் இதே ஆக்ரோஷத்தை நேருக்கு நேர் காட்டுவது மிகவும் முக்கியம்" என்று கிராலி மேலும் கூறினார்.
இருப்பினும், இங்கிலாந்து அணி இவ்வளவு ஆக்ரோஷம் காட்டியபோதும், அனுபவம் குறைந்த இளம் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணிலேயே அந்தத் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. வார்த்தைப் போரில் இங்கிலாந்து வீரர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த ஆக்ரோஷமும், சீண்டல்களும் களத்தில் வெற்றியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.