ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலக அளவில் 24,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதன் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு 700ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள் முடக்கம்
சர்வதேச அளவில் விளையாட்டுத்துறை கடுமையான முடக்கத்தை சந்தித்துள்ளது. பல்வேறு விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வீட்டில் இருந்தாலும், தங்களை பயிற்சிகள் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து பிசியாகவே அவர்கள் வைத்துள்ளனர்.
|
பயிற்சிகளால் பிசியான ரிஷப்
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த், தன்னுடைய வீட்டிலேயே பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டும், ட்ரெட்மில்லில் வொர்க் அவுட் செய்தும் பிசியாக இருக்கும் வீடியோவை பிசிசிஐ தன்னுடைய டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. அவரின் உடல் பிட்னெசின் காரணம் இந்த வீடியோ மூலம் வெளிப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிக்காக காத்திருப்பு
கடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடாத ரிஷப் பந்த், தற்போது தன்னுடைய திறனை வெளிப்படுத்த ஐபிஎல் போட்டிகளுக்காக காத்திருக்கிறார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடிவரும் ரிஷப் பந்த், கடந்த ஆண்டு நடைபெற்ற 16 போட்டிகளில் விளையாடி, 488 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.