இந்திய கிரிக்கெட் அணிக்கு சேவாக் திரும்புவது இனி கனவுதானா?
டெல்லி: இந்திய அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் இந்திய அணியின் சீருடையை அணிவது என்பது இனிமேல் கனவாகவே கலையப்போகிறது என்கின்றனர் கிரிக்கெட் நிபுணர்கள்.
உலக அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் வீரேந்திர சேவாக். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆனால் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட சேவாக்கிற்கு அதன்பிறகு சான்ஸ் கிடைப்பது என்பதே குதிரை கொம்பாக மாறிப்போயுள்ளது.

இளம் வீரர்கள் அபாரம்
இந்திய இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் சேவாக் மீது தேர்வுக்குழு பார்வை விழவில்லை.

ஒதுங்கியிருக்க சேவாக் முடிவு
இந்நிலையில் தொடங்க உள்ள தியோதர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வடக்கு மண்டலம் சார்பாக சேவாக் மற்றும் கம்பீர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்வுக்குழுவினரிடம், தன்னால் விளையாட முடியாது என்று சேவாக் கூறிவிட்டாராம்.

இளைஞருக்கு வழி
இளைஞர்களுக்கு வழிவிடுவதற்காகவே இம்முடிவை எடுத்ததாக சேவாக் கூறியுள்ளார். இந்த தொடரில் சிறப்பாக ஆடுவதன் மூலம் இழந்த பார்மை திரும்ப கொண்டு வந்திருக்கலாம் என்று சேவாக் குறித்து அவரது ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கவுதம் கம்பீரும் வெளியேற்றம்
அதே நேரம் கம்பீரும் வடக்கு மண்டலத்திற்காக ஆட மறுத்துள்ளார். ஆனால் காரணம் கூறப்படவில்லை.

ஓப்பனிங் ஸ்ட்டிராங்
சேவாக்கை பொறுத்தளவில், வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்காக களமிறங்க வாய்ப்பு மிக சொற்பமாக உள்ளது. ஏனெனில் ஓப்பனிங்கில் ஷிக்கர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் பார்மிலுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு காயமேற்பட்டாலும் ரகானே ஓப்பனிங்கில் இறங்க வாய்ப்புள்ளது.

உலக கோப்பை
உலக கோப்பை போட்டிகளுக்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலையில், சேவாக்கை மீண்டும் அணியில் சேர்ப்பது கஷ்டமே.

வயது அதிகம்
சேவாக்கிற்கு தற்போது 36 வயதாகிறது. அவர் பார்மிலும் இல்லை. வயது மற்றும் பார்மில் இல்லாதது ஆகியவற்றின் அடிப்படையில் இனிமேல் இந்திய அணியில் சேவாக்கிற்கு வாய்ப்பு தரப்படாது என்றே விளையாட்டு வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.

சேவாக்கிற்கு ரசிகர்கள் அதிகம்
இந்திய பேட்ஸ்மேன்களிலேயே, டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 2 முறை 300 ரன்களை கடந்த வீரர் சேவாக் மட்டுமே. மற்றொரு முறை 293 ரன்களில் அவுட் ஆனார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும் விளாசியுள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்களும் அதிகம்.

கனவுதானோ
சேவாக்கின் ரசிகர்கள் மீண்டும் அவரை இந்திய ஜெர்சியில் பார்க்க வேண்டும் என்று பேராவல் கொண்டுள்ளனர். ஆனால் சேவாக்கே அதை விரும்பாதது போல தெரிவதால், ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறப்போவதில்லை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications